பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 27

பெண்ணொருத்தி நெஞ்சிரங்கிப் பேருதவி செய்தமையால்
உண்ண வழியுண்(டு) ஒருநா ழிகைபொறுப்பீர்!

ஆக்கிப் படைக்கின்றேன் அத்தான்” என;அவளை
நோக்கிமுகம் தாழ்த்திப்பின் நூலெடுத்தேன் பாப்புனைய;

சித்தம் கலங்கியதால் சீர்தளைகள் மாய்ந்தனவே
எத்துயரம் வந்தாலும் எல்லை கடந்தறியேன்

பாவை நிறுத்திவிட்டேன்; பையன் சிறுவனைஎன்
பாவை அடிக்கப் பதறுவதைக் கேட்டெழுந்(து)

ஏனடித்தாய்? என்றேன்; “திருடியதால்” என்றவுடன்
நான்துடித்து நாமடித்துச் செய்தனையோ? என்றதட்ட,

“ஆமாம், பசியப்பா அன்னம் திருடிவிட்டேன்
தீமை இனிச்செய்யேன் சீற்றம் தவிர்”கென்றான்;

வாயடைத்துப் போயினேன்; வாழ்வில் உணவின்றேல்
தீயனதாம் பல்கும், திருட்டுத் தொழில்பெருகும்

என்றுணர்ந்து மன்னித் திளையவனை விட்டுவிட்டேன்;
முன்றில்முன் என்சிறுவர் மோதி அடிதடிகள்

செய்திருந்தார்; சீறிச் சினந்துரைத்தேன்; ஓர்சிறுவன்
மெய்யுரைத்தான்; “என்னின் மிகுபண்டம் அண்ணனுக்(கு)

அன்னை கொடுத்தாள், அதனால் பிணக்குற்றோம்
என்னை அடிக்காதீர்!” என்றுரைத் தோடிவிட்டான்;

ஓஓ! அதுசரியே, ஓரிடத்தில் உண்டிமிகின்
ஓவாப் பகைமூளும், ஓநாய்ச் செயல்விஞ்சும்,

பாரிற் சமமாகப் பாத்தூண் கொடுத்துவிடின்*
போரில் இறங்குகின்ற புன்மைகள்தாம் உண்டோ?

வயிற்றுக் கவலையின்றேல் வாழ்க்கைவளம் எய்தும்
*அயிர்ப்பில்லை; “உண்டிமுதற் றேஉணவின் பிண்ட” மெனச்


*பாத்தூண் கொடுத்து விடின் - பகுத்து உணவு கொடுத்து விட்டால் *அயிர்ப்பு - ஐயம்