பக்கம் எண் :

30கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

5. பாரதியும் கவிதையும்

நேரிசை ஆசிரியப்பா

அவனோர் பரிதி

உரிமைப்போரில் ஊரெலாந் திரட்டி
அரியே றென்ன ஆர்த்தெழு வீரன்

அரசியல் தலைவன் அரங்கிலும் தலைவன்
கலைகள் வல்லான் கணேசப் பெயரினன்

அவையோர் முதல்வர் அனைவர்க்கும் வணக்கம்(5)
கவிஎனப் பிறந்தவன் காணும் இயற்கைத்

தாயின் மடியில் தவழ்ந்து மகிழ்ந்தவன்
உலகப் பள்ளியில் ஓதித் தெளிந்தவன்

அஞ்சுதல் இல்லா ஆண்மையன் நறுமணப்
பாமலர் தொடுத்துப் பாடுவ தவன்தொழில்(10)
கவிதை மணிப்பெயர்க் காதலி கொழுநன்
வையம் முழுதும் வணங்கிப் பணியப்
பாட்டுத் திறத்தால் பாலித் திருந்தோன்
கவிஞர் தம்முள் மணிமுடி யரசன்
புதுமை பூக்கும் பொதுமைப் பூங்கா(15)
பழமையை ஒதுக்கிப் பாயும் ஆறு
செவியில் இன்னிசை சேர்க்கும் அருவி
எட்டய புரத்தில் எழுந்திடும் பரிதி
அவனே பாரதி வாழிய அவன்பேர்!