பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 37

வேண்டா நட்பு

சூதுமிகு நெஞ்சினராய்ச் சிரித்துப் பேசிச்
    சொல்வேறு வினைவேறு பட்டார் நட்பும்,
பாதகங்கள் செய்யார்போல் தொழுது நின்று
    படையொடுங்கும் கையுடைய ஒன்னார் நட்பும்,
தீதறியா நன்மனத்தால் அமையார் நட்பும்,
    திறம்படுநூல் பலகற்றும் உள்ளம் மாணாப்
*பேதுடையார் நட்புமிவை தீமை எல்லாம்
    பெருக்கிவிடும் கொள்ளற்க என்றும் சொன்னான்(3)

உணர்ச்சி நட்பு

காடெல்லாம் கழனியென வளங்கொ ழிக்கக்
    காவிரித்தாய் அருள்சுரக்கும் சோழ நாட்டுப்
**பீடுயர்கோப் பெருஞ்சோழன், பாண்டி நாட்டுப்
    பெரும்புலமைப் பிசிராந்தைப் பெயரோன், என்போர்
***பாடரிய ஒருவர்புகழ் ஒருவர் கேட்டுப்
    பழகலலால் சேர்ந்திருந்து பழகல் இல்லார்
ஊடெழுந்த உயர்நட்பின் திறத்தை நம்மால்
    உணர்ந்துரைக்க எளிதாமோ உலகீர் இன்றே?(4)
¶வடக்கிருந்தான் அச்சோழன் என்று ணர்ந்து
    வழியருமை கருதிலராய் விரைந்து வந்து
படக்கிடந்தார் அப்புலவர் என்ற செய்தி
    பாரறியும்; அழிவின்கண் அல்லல் உற்றுக்
கிடப்பதுவே நட்பென்றும், உணர்ச்சி நட்பாங்
    கிழமைதரும், புணர்ச்சியது வேண்டா என்றும்
எடுத்துரைத்த இலக்கணத்துக் கிலக்காய் உள்ளோர்
    இவ்வரிய இருநண்பர் அன்றோ சொல்வீர்(5)


*பேதுடையார் - அறியாமை உடையவர், **பீடு - பெருமை ***பாடரிய - பாட அரிய
வடக்கிருத்தல் - வடக்கு நோக்கியிருந்து உண்ணாது உயிர் துறத்தல்