பக்கம் எண் :

38கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

செயற்கரிய நட்பு

‘ஆன்றவிந்த பலசான்றோர் வாழும் ஊரேன்
    ஆதலினால் மகிழ்ந்திருந்தேன் நரையொ ழிந்தேன்
நான், புலவீர்!’ என்றுபிசி ராந்தைப் பேரார்
    நவிலுவரேல், உடலுரமும் மகிழ்வும் நட்புத்
தான்றருமென் றுணர்கின்றோம், தக்கார் கூடி
    நகலினினி தாயிற்பின் காண்போம் அந்த
வான்றொடுக்கும் பதிஎன்றார் சான்றோர்; வாழ்வில்
    செயற்கரிய யாவுளவோ நட்பே போல?(6)

கொடுத்துங் கொளல்

இறப்பொழிக்கும் மருந்தனைய, எங்குங் காணா
    இருநெல்லிக் கனிஒன்றை நெடுமான் அஞ்சி
மறைந்திருந்து தானுண்ணும் மனமே இல்லான்
    கொடுத்துவக்கும் மாண்புடையன் ஈர நெஞ்சன்
சுரக்கின்ற அன்பூற அவ்வை என்னும்
    சொற்கிழத்திக் கீந்துவந்தான் என்ற செய்கை,
சிறப்பிருக்கும் பண்பினர்க்குப் பொருள்கொ டுத்துங்
    கொளல்வேண்டும் நட்பென்ற உண்மை காட்டும்(7)

தெளிந்த நட்பு

தண்ணிலவின் ஒளிக்கதிர்கள் சாள ரத்துள்
    தலைகாட்டி ஒளிசெய்ய, பஞ்சின் சேக்கை*
வெண்மலரின் மணம்விரிக்க, தென்றற் காற்று
    விளையாடி அவண்திரிய**, பொய்யாச் சொல்லன்***
கண்மலர்கள் குவித்திருக்க அறியா நல்லாள்¶
    கணவனென அவனருகே துயிலக் கண்டான்
கண்ணியவான் சீனக்கன், பதறல் இல்லான்
    கதறல்இலான் அவரிடையே பள்ளி கொண்டான்(8)


*சேக்கை - படுக்கை, **அவண் - அங்கே, ***பொய்யாச் சொல்லன் - பொய்யா மொழிப் புலவர்
¶நல்லாள் - சீனக்கன் மனைவி