பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 39

‘உயிரனைய என்நண்பன் தெளிந்த இல்லில்மு
    ஒருதீங்கும் செயஒவ்வான், அறியா திங்கே
அயர்ந்துறக்கம் கொண்டுள்ளான்’ என்றி ருந்த
    அயிர்ப்பில்லாச் சீனக்கன் நட்பை எண்ணின்
உயிருருகும் ஊனுருகும் உள்ளமெல்லாம்
    உருகுமன்றோ? நட்டார், தன் மனம்நோ தக்க
செயல்செய்யின் பேதைமைஎன் றுணர்க என்றே
    செப்பியநம் வள்ளுவன்சொல் சிந்தை கொள்வீர்(9)

அன்பின் வழிவந்த நட்பு

அரண்மனையில் தனியிடத்தில் துரியன் காதல்
    அரசியொடு சொக்கட்டான் கன்னன் ஆட,
வருகின்ற** கொழுநற்கண் டெழுந்தாள்; வேந்தன்
    வரவறியாக் கன்னன்முன் றானை பற்றத்
தருமணிமே கலையுகவே கண்டான் அந்தத்
    தலைவணங்கா முடியரசன்; துரியன் என்னும்
உருமிடியே றன்னான்என் செய்வ னோஎன்
    றுளமொடுங்கி உயிரொடுங்கி நின்றான் கன்னன்(10)

தோள்வலிமை படைவலிமை துணையின் வன்மை
    சொல்கின்ற வலிமைஎலாம் கொண்ட வேந்தன்
தோள்விழையும் தன்மனையைக் கூசா திங்குத்
    தொட்டிழுத்த கையிரண்டைத் தலையை மெய்யை
வாள்வலியாற் பலகூறா ஆக்க வல்லான்,
    ‘எடுப்பதுவோ கோப்பதுவோ மணியை’ என்றான்;
நீள்அன்பின் வழிவந்த கேண்மை யாளர்
    ***அழிவந்த செய்யினுமன் பொழியார் அன்றோ!(11)


*தெளிந்த இல் - மனம் தெளிந்து பழகும் வீடு, **கொழுநன் - கணவன், ***அழிவந்த -அழிவு தரும் செயல்