பக்கம் எண் :

40கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

ஈடிலா நட்பு

மதிமுகத்துக் காதலியாள் தந்த இன்பம்
    மழலைமொழிச் செல்வங்கள் தந்த இன்பம்
புதிர்போலும் மேலுலக வீடென் றிங்குப்
    புகல்கின்ற இன்பம்அறம் தந்த இன்பம்
மதுவருந்திக் கவிநுகர்ந்து யாருங் காணா
    மயலுலகில் பறந்துவரும் இன்ப மெல்லாம்
மதிமிகுத்த நட்பீனும் இன்பம் ஆமோ?
    மாநிலத்தீர் உயர்நட்பைப் பேணிக் கொள்வீர்(12)

உடல்குறைக்கும் மனக்கவலை என்னும் நோய்க்கோர்
    ஒப்பரிய மருந்தாகிப், புண்ணும் ஆற்றித்,
தொடர்கின்ற துன்பத்திற் பங்கு கொண்டு,
    துணைநின்று, மகிழ்வாகத் துயரும் ஏற்றுக்,
கெடுவழியில் அறியாமல் செல்லுங் காலை
    கிளர்ந்தொளிரும் ஒளிவிளக்காய் வழியுங் காட்டி,
உடனுறைந்து தோள்தந்து பகைப்பு லத்தும்
    உயிர்காக்கும் நட்பினைப்போல் உலகில் உண்டோ?(13)

உளங்கவர் நட்பு

காதலியைப் பிரிந்தேனும் இருத்தல் ஆகும்
    கருத்தொன்றும் நண்பரையார் பிரிய வல்லார்?
தீதறியா நட்பதனின்* உலகில் நெஞ்சம்
    திறந்துரைக்க இடமுண்டோ? எண்ணக் கூட்டம்
மோதுகின்ற பொழுதத்து மனங்க லங்கி
    மூழ்காமல் வழிப்படுத்த வல்லார் யாரோ?
சூதறியா நண்பனுளம் திறந்து பார்ப்போர்
    துணைசெய்யும் நண்பருருத் தோன்றல் காண்பார்(14)


*நட்பதனின் - நட்பைவிட