பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 41

தீய நட்பு

தகுதியிலார் தம்புகழே பரப்பு தற்குத்
    தாளமிடும் நட்புண்டு; நண்பர் தம்முள்
பகைவிளைத்துக் கோள்சொல்லி இன்பங் காணும்
    பதர்மனிதர் நட்புண்டு; மூன்று நான்கு
பகலிருக்கும் சிற்றுண்டி நட்பும் உண்டு;
    பண்பில்லாச் சிறுமதியர் செய்த ஒன்றை
மிகவுரைத்து மகிழ்கின்ற நட்பும் உண்டு;
    மெதுவாக வஞ்சிக்கும் நட்பும் உண்டு;(15)

தொடர்வண்டி நட்புண்டு; பயனில் பேச்சுத்
    துணைக்காகத் திரிந்துவரும் நட்பும் உண்டு;
*குடர்மிகுந்த தொந்திக்குப் பூசை செய்யக்
    கும்பிட்டு வால்பிடிக்கும் நட்பும் உண்டு;
பிடர்சொரிந்து வாய்பிளந்து புகழ்ந்து பேசிப்
    பின்புறத்து வசைபொழியும் நட்பும் உண்டு;
கடன்தந்து வளர்க்கின்ற நட்பும் உண்டு;
    காசினியீர் இவைஎல்லாம் நட்போ? சொல்வீர்(16)

நட்பு மலர்

உளமொன்றி உயிரொன்றி நன்மை தீமை
    உறுகாலத் துடனொன்றி உயர்ந்த செல்வ
வளமென்றுங் குலமென்றும் சமய மென்றும்
    வகைப்படுத்தி உணராமல் வாழின் உள்ளக்
குளமன்றில் நட்புமலர் பூத்துக் காட்டும்;
    குவலயத்தில் சிலரேஇப் பண்பு ணர்ந்தார்;
களவொன்றும் நெஞ்சுடையார் பணத்தை வீசிப்
    பெறமுயல்வார் கடைச்சரக்கா இந்த நட்பு?(17)


*குடர் - குடல்