பக்கம் எண் :

42கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

அமைதி தரும் நட்பு

பகைகுறித்த நாடெல்லாம் பகைவி டுத்துப்
    பாரனைத்தும் ஆள்கின்ற மனம்வி டுத்துத்
தொகைமிகுத்த அணுவெடியைக் கைவி டுத்துத்
    தொல்லைப்போர் வெறிவிடுத்து நட்பை நாடி
வகைவகுத்து நாடோறும் திரியக் கண்டோம்;
    வல்லரசே இவ்வண்ணம் என்றால் நட்பின்
தகைகுறித்து வாய்திறத்தல் எளிதோ சொல்வீர்
    தாரணியில் அமைதிக்கு நட்பே வேண்டும்(18)

இந்தஒரு குறட்கழகம் வசதி ஒன்றும்
    இலாதிருந்தும் தளராத உழைப்பும் நட்பும்
உந்திஎழும் தொண்டுளமும் துணையாக் கொண்டே
    ஒளிபெறச்செய் தேனப்பன் எண்ணம் வாழ்க!
இந்தியினால் வடமொழியால் ஆங்கி லத்தால்
    இடர்வருமேல் இடுப்பொடிக்கும் வீரம் வாழ்க!
புந்திதரும் குறள்வாழ்க! கழகம் வாழ்க!
    புதுமைஎலாம் நிறைந்தொளிரும் தமிழே வாழ்க!(19)

தலைவர்: அண்ணல் பு.அ.சுப்பிரமணியனார்

தலைப்பு: வள்ளுவர் வாக்கில் - நட்பு

இடம்: குறள்விழா - காரைக்குடி

நாள்: 22.7.1956


தேனப்பன் - பொறியாளர் தேனப்பன் காரைக்குடி குறட்கழகம் தோன்றக் காரணமாயிருந்தவர் குறட்கழகத் தொடக்க முதல் பல ஆண்டுகள் செயலராகப் பணியாற்றிய நன்மனத் தொண்டர்.