பக்கம் எண் :

4கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

இன்றைய நிலை

இந்நாட்டைத் திராவிடநா டென்றுஞ் சொல்வர்
    இயல்புடைய நல்லறிஞர்; இந்த நாட்டில்
முன்கூட்டி மூத்தகுடி தமிழர் என்போர்
    நாகரிக முதிர்ச்சியினில் வாழ்ந்த நல்லோர்
இன்பூட்டும் தமிழ்வாழ்வைப் பாடுங் காலை
    இதயத்தால் பூரித்தேன்; ஆனால் இன்று
பின்பாட்டுப் பாடுகிற தமிழன் வாழ்வைப்
    பேசுதற்கும் நாணுகின்றேன் கூசு கின்றேன்(3)

இருவேறு வாழ்வு

உயிர்பெரிதா? உன்மானம் பெரிதா? என்றால்
    உயிர்சிறிது மானந்தான் பெரிதே என்பான்;
உயிர்கொடுத்தும் தன்மானம் ஒன்றே காப்பான்
    ஒருவாழ்வே தமிழ்வாழ்வு; குறளின் வாழ்வு;
துயர்வருமேல் மானத்தை விலையாக் கூறித்
    துணிமணிகள் உணவுவகை நிறையப் பெற்று
வயிறுவளர்க் குந்தொழிலால் உயிரைப் பேணி
    வாழ்வதுவா தமிழ்வாழ்வு? மனுவின் வாழ்வு(4)
தன்னினத்தின் ஒருமகனைத் தமிழன் தன்னைத்
    தருக்குடையான் பிறநாட்டான் இழித்து ரைத்தால்
என்னினத்தை இகழ்ந்தவனை விட்டு வையேன்
    என்றெழுந்த மறவாழ்வே தமிழ வாழ்வு;
தன்னலத்தைத் தனிப்புகழைப் பணத்தைக் காசைத்
    தக்கபடி காப்பதற்குச் சூழ்ச்சி செய்து
தன்னினத்தை மாற்றார்க்குக் காட்டிக் காலைத்
    தாங்குவதோ தமிழ்வாழ்வு? ஈன வாழ்வு;(5)