பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 5

ஒருகடவுள் ஒருசாதி என்ற பாங்கில்
    ஓரினமாய், அயலவரும் உறவாய் நண்பாய்ப்
பெருமையுடன் தமிழ்மொழியை நாட்டைப் பேணிப்
    பீடுபெற வாழ்வதுவே தமிழ வாழ்வு;
பெருகுதொகைக் கடவுளரும், உயர்வு தாழ்வு
    பிறவியினால் பேசுகின்ற எண்ணில் சாதிக்
குறுமனமும், பேதைமையும் அடிமைப் பண்பும்
    கொள்வதுவோ தமிழ்வாழ்வு? கொடுமை வாழ்வு(6)

எது தமிழ் வாழ்வு?

நம்பெயரில் தமிழிருத்தல், ஆடல் பாடல்
    நாம்காணும் நிழற்படங்கள் தமிழைக் காட்டல்,
செம்மையுறு திருமணத்தில் தமிழை ஓதல்,
    செய்தித்தாள் நற்றமிழை எழுதிக் காட்டல்,
நம்மினத்தார் உழைப்பிலுருப் பெற்ற கோவில்
    நல்லதமிழ்ப் பாட்டொலியே முழங்கச் செய்தல்,
நம்பிள்ளை பயில்கல்வி தமிழாய் நிற்றல்,
    நாடெல்லாம் தமிழாயின் தமிழ வாழ்வு(7)
எத்துணையர் தமிழ்ப்பெயரைத் தாங்கி யுள்ளார்?
    எவரேனும் ஓரிருவர் தமிழ்ப்பேர் சொன்னால்
பித்தரென ஏசுவதும் கட்சி சார்த்தித்
    தி.மு.க. என்றிகழ்ந்தும் பேசல் கண்டோம்;
முத்தமிழும் தி.மு.க. சொத்தா என்ன?
    முளைத்தபிற கட்சிகளில் தமிழர் இல்லை?*
கொத்தடிமை மனப்போக்கால் அயன்மொ ழிக்கே
    கும்பிட்டுத் திரிவதுவோ தமிழ வாழ்வு?(8)


*முளைத்த பிற கட்சிகளில் தமிழர் இல்லை என்பது வினாவும் விடையுமாக அமைந்துள்ள நயம் காண்க.