பக்கம் எண் :

46கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

கீழான இக்குணத்தில் கேளிர் எனுமெண்ணம்
பாழாம் நிலையன்றிப் பண்படுமோ நீர்சொல்லும்!

பேரறிவு படைத்தோம்நாம் பேசுகிறோம்! பகுத்துணரும்
ஓரறிவு தனையிழந்தோம் உயிர்க்கின்றோம் அந்தந்தோ!

ஊர்காத்தும் நகர்காத்தும் உயர்நாடு தனைக்காத்தும்
பார்காத்தும் யாதும்ஊர்ப் பண்புணர்ந்து மிகக்காத்தும்

தற்காத்தும் தமிழினமுங் காத்துலகங் கேளிர்என்ற
சொற்காத்தும் நல்லறிஞர்** சூழ்துணையால் நாம்வாழ்வோம்;

தைத்திருநாள்

வளைத்த இருள்கிழித்து வாடைப்*** பனிநீங்க
முளைத்த இளம்பரிதி¶ முகங்கண்டு வணங்கிடுவோம்

குழைத்தெடுத்த பொங்கலுண்டு குலவிக் களித்திடுவோம்
உழைப்பின் பயன்தருநாள் ஊரெல்லாம் புதுக்கும்நாள்

தைத்திருநாள் இத்திருநாள் தமிழ்காட்டும் நல்லுலகில்
வைத்துமனம் வாழ்வோம் மகிழ்ந்து.

தலைவர்:செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பரநாதனார்

தலைப்பு:தமிழ் காட்டும் நல்லுலகு - யாதும் ஊரே யாவரும் கேளிர்

இடம்:வானொலி நிலையம் - திருச்சிராப்பள்ளி

நாள்:14.1.1957.


**நல்லறிஞர், ***வாடை, ¶இளம்பரிதி என்னுஞ் சொற்களின் குறிப்பை உணர்ந்து கொள்க.
தமிழன் என்றோர் இனமுண்டு, தமிழ்நாடென்றொரு நாடுண்டு என்று நாம் உரைத்தால், சிலர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கூறிய தமிழன் இவ்வாறு குறுகிய நோக்கங் கொண்டு, பிரித்துப் பேசலாமா? என்று நம்மை மடக்கப் பார்ப்பர். அவர்கட்கு நல்ல விளக்கந் தருகிறது இப்பாடல்.