பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 49

பாவலர்தம் “எல்லார்க்கும் பணிதல் நன்றாம்”
    என்றவுரை பகுத்துணர்ந்து பெரியர் ஆனார்;
மேவியதோர் தந்நிலையிற் றிரியா தாங்கண்
    மிகவடங்கி மலையினுமே பெரிதாய் நின்றார்;(6)
**ஒப்புரவு கண்ணோட்டம் அன்பு வாய்மை
    உயர்நாணம் இவ்வைந்தால் சால்பு¶ தாங்கிச்
செப்பரிய ***மிகுதியினால் மிக்க செய்யின்
    செயற்கரிய தகுதியினால் அவரை வென்றார்;
இப்புவியில் ஆணுக்குங் கற்பு வேண்டும்
    என்றதிரு வள்ளுவனார் நெறியில் நின்றார்;
தப்பரிய குறள்நெறியிற் சிறிதும் மாறார்
    தமிழ்ப்பெரியார் திரு. வி. க. நற்பேர் வாழ்க!(7)

எது அறம்?

இல்லறமா துறவறமா இவ்வி ரண்டுள்
    எதுவேண்டும் எனவினவின், அறமென் றோத
இல்லறமே சாலுமெனக் குறள்நூல் சொல்லும்;
    இந்நூலில் காமத்தை வேண்டா என்று
சொல்லியவர் முன்னின்றே இல்ல றந்தான்
    தூயதெனச் சான்றுரைத்து நிறுவிக் காட்டி
வெல்லுதலைத் தாம்கொண்டு குறள்நூல் வாக்கின்
    மெய்ப்பொருளை நன்குணர்ந்து விளக்கி நின்றார்(8)

பெண்ணின் பெருமை

சிறுவரையும் ஒருபொருளா எண்ணச் செய்யும்
    செல்வத்தைப் பெண்ணாக்கி, மடமை தீய்க்கும்
பெருவலிய கல்வியையும் ஓர்பெண் ணாக்கி,
    பெறுவெற்றி, நல்லழகு, நிலம்பெண் ணாக்கி,


**ஒப்புரவு - பிறருக்கு உதவுதல், ¶சால்பு - சான்றாண்மை, ***மிகுதியினால் - செருக்கால்
காமத்துப் பாலை வேண்டாவென்று கூறியவர் முன்னாள் கல்வியமைச்சர்