பக்கம் எண் :

50கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

வருபசியை நீக்குகின்ற கூலம்* மற்றும்
    வறுமையையும் பெண்ணாக்கி, வாழ்வில் என்றும்
உறுதுணையாய் நல்விளக்காய் விளங்கு கின்ற
    ஓரினத்தைப் புண்ணாக்கி மகிழ்வு கொண்டோம்(9)
இருகண்ணில் ஒருகண்ணைப் புண்ப டுத்தி
    இயற்கைஎழில் மறுகண்ணால் காண முந்தும்
பெருமதியீர்! பெண்மைக்குப் பெருமை நல்கப்
    பிந்தாதீர்! நடந்துசெலக் காலி ரண்டும்
சரிசமமா இல்லைஎனில் நொண்டி என்று
    சாற்றுவரால்; சமன்செய்து வாழ்க என்றார்
பெருமைமிகு திரு. வி. க. நல்ல பெண்ணிற்
    பெருந்தக்க யாவுளவோ எனுஞ்சொல் ஓர்ந்தார்**(10)

இனியவை கூறல்

***படிறிலதாய்ச், செம்பொருளைக் கண்டார் வாய்தான்
    பகருவதாய், அன்புலகந் திருப்ப தொன்றே
¶படியதனில் இன்சொல்லென் றுரைக்கும் பாட்டைப்
    பயிலுங்கால் பொருள் தேறேன்;‡ தமிழ வானின்
விடிவெள்ளி திரு. வி. க. மொழியைக் கேட்டேன்
    விளங்காத அக்குறளின் பொருளுணர்ந்தேன்
கடிதலிலா இன்சொல்லின் இலக்க ணத்தைக்
    கண்டுகொண்டேன் இனியவையே அவர்வாய்ச் சொற்கள் (11)
*துனியுடைய ஒருசிலர்தாம் கூடி நின்று
    தூய்மைக்குத் தொடர்பிலராய் விலகிச் சென்று
நனியிகந்த சுடுமொழிகள் கழறித் தம்முள்
    நகுமொழிகள் பலசொல்லி நகைத்தா ரேனும்
**முனிவறியார், பணிவுடையார், இன்னாச் சொல்லை
    மொழிந்தறியார், அறிவுரையே உரைத்து நிற்பார்
இனியஉள வாகவுமின் னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்தல் என்றார் அன்றோ?(12)


*கூலம் - தானியம் **ஓர்ந்தார் - ஆய்ந்து உணர்ந்தார். ***படிறு - வஞ்சனை, ¶படி - உலகம்,
‡தேறேன் - தெளிவாக உணர்ந்திலேன் *துனி - பகைமை, **முனிவு - வெறுப்பு