பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 53

தவஞ்செய்தார்

பிறனாக்கம் காணினிவர் பொறாமை கொள்ளார்;
    பேணிஅவர் பெருமைஎலாம் புகழ்ந்து பேசி
அறனாக்கம் மிகப்பெற்றார்; மறந்து நின்றும்
    அணுவளவும் பிறன்கேடு சூழார்; மேலும்
உரன்ஆக்கும் தவஞ்செய்தார்; காடு செல்லார்;
    உடுப்பதுவுங் காவிகொளார்; துறவும் பூணார்;
தரங்கெடுக்கும் ஆசையினால் அவஞ்செய் யாராய்த்
    தங்கருமஞ் செய்துதவஞ் செய்தார் ஆவர்(19)

உயர்நட்பு

தொழிலாளர் நலங்கருதி உழைக்கும் போழ்து
    தூய்மனத்துக் காந்தியிவண் வந்தார் என்று
முழுவாழ்வுத் தமிழ்ப்பெரியார் காணச் சென்றார்;
    முகஞ்சுருக்கி *“எற்காணக் குருதி தோய்ந்து
பழுதான கைகளோடு வந்தாய்?” என்று
    பகர்ந்ததுமே திடுக்கிட்டார் திகைத்து நின்றார்;
தொழுதபடி ஒருசொல்லும் கூறா ராகித்
    துயர்படிந்த மனத்தினராய் இல்லம் சேர்ந்தார்(20)

“அமைதிக்கே நமதுவிரல் அசையும் அல்லால்
    அறியாது மற்றொன்றும், குருதி ஏது?
*சுமைமனத்தர் அவர்மனத்தை மாற்றி விட்டார்!
    சூதறியா நல்லுள்ள மேனும் கீழோர்
இமைநொடியில் மற்றுவரோ? என்று சிந்தித்
    தினிதிருந்தார்; நோதக்க நட்டார் செய்யின்
தமையறியாப் பேதைமையாம் கிழமை யும்மாம்;
    தமிழ்நெஞ்சம் வன்சொல்லை மறந்த தன்றே(21)


*எற்காண - என்னைக்காண *சுமை மனத்தர் - தீமை சுமக்கும் மனத்தினர்