பக்கம் எண் :

54கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

தென்னாட்டில் இந்திமொழி புகுந்த காலை
    திருநாட்டின் **முதலமைச்சர் இவர்க்கு முன்பே
பன்னாள்கள் பழகியநல் நண்ப ரேனும்
    “பைந்தமிழ்க்குத் தீங்குசெய வேண்டா” வென்று
முன்கூட்டி இடித்துரைத்தார், அல்லல் ஏற்றார்;
    முகநகுதற் பொருட்டன்று நட்டல், நட்டார்
பின்னீர்க்கும் மிகுதிக்கண் இடித்து ரைத்துப்
    பேசுதற்கே என்றகுறள் தெளிந்து நின்றார்(22)

ஈரோட்டுப் பெரியாரும் திரு. வி. க. வும்
    இனிதுவப்பத் தலைக்கூடிப் பின்பு கொள்கை
வேறாகிப் பிரிந்தாலும் உள்ளும் வண்ணம்
    விலகுதலே மேற்கொண்டார், என்றும் போலச்
சீராட்டிப் பேசிடுவார், ஒருகால் ஆள்வோர்
    சிறைவைத்தார் பெரியாரை என்று கேட்டுச்
“சாராட்சி நடப்பதுவோ? சரிந்து மாயும்
    சமயமிதோ?” எனக்கனன்று தலைமை ஏற்றார்(23)

சென்னைநகர்ப் பெருந்திடலில் மக்கள் கூட்டம்
    சிங்கமெனச் சூழ்ந்திருக்கத் தலைவர் நின்றார்
முன்புறத்தில் துப்பாக்கி வீரர் நின்றார்
    முதன்மைபெறும் ஊர்காவல் தலைவர் வந்து
பின்னின்று மறுப்பாணை தந்தார்; திங்கள்
    பிழம்பனலைக் கக்கியது கண்டேன் கண்டேன்
உன்னுமுனம் உடுக்கையிழந் தவன்கை போல
    உதவுநட்புக் கிலக்கியமாய் வாழ்ந்து நின்றார்(24)


முதலமைச்சர் - ஓ.பி. இராமசாமி ரெட்டியார்