பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 59

கரவாத பிறரெவரும் இருப்ப ரேல்இக்
    காலத்தும் உளரெழுவர் வள்ளல் என்பேம்
பிறராருங் காணேமால், ஒருவன் நின்றான்
    பெருங்கொடைஞர் அறுவர்க்கு யாண்டுச் செல்கேம்?(5)

ஆதலினால் முன்வகுத்த எழுவர் என்ற
    எண்மாற்றி அவருடனே எண்மர் என்போம்;
ஓதுகின்ற மாணவரும் தேர்வுத் தாளில்
    உயர்வள்ளல் எண்மரென எழுதிப் போந்தால்
பேதலியேம் மதிப்பெண்கள் உரிய நல்கிப்
    பெருங்கொடையால் வள்ளலென யாமும் வாழ்வோம்;
ஏதமிலான் இத்துறையில் புரட்சி செய்தான்
    எவரிந்த அழகப்ப வள்ள லொப்பார்?(6)

ஒரே வள்ளல்!

அன்றிருந்த கொடையாளர் எழுவர் தாமோ?
    ஆயிரவர் இருந்தமைக்கு நூல்கள் சான்றாம்;
என்றாலும் வள்ளலெனும் பெயரைப் பெற்றார்
    எழுவர்க்கு மேலில்லை; இற்றை நாளும்
துன்றியதம் பொருளீவார் பலர்தா மேனும்
    துணிந்துரைக்கின் வள்ளலெனும் புகழைத் தாங்கி
நின்றிருக்க அழகப்பன் ஒருவ னேதான்;
    நெஞ்சிருப்போர் கைவைத்தால் இதயம் சொல்லும்(7)

அரசரும் வள்ளலும்

தென்னாட்டுத் திசைதோறும் கோவில்கட்டித்
    திருப்பணிகள் எனும்பெயரால் அள்ளி வீசும்
இந்நாட்டுப் பரம்பரையில் இருவர் தோன்றி
    இருநிதியம் கல்விக்கே வாரித் தந்தார்;
முன்கூட்டிச் செய்தவர்நம் செட்டி நாட்டு
    முதல்மன்னர்;* அழகப்பர் மற்றோர் வள்ளல்;
என்பாட்டுக் கடங்காது வள்ளல் உள்ளம்
    **கொடைமடமென் றிருசொல்லே சொல்லத் தோன்றும்(8)


*முதல் மன்னர் - செட்டிநாட்டரசர் அண்ணாமலையார் **கொடைமடம் - அள்ளிக் கொடுப்பதில் அறியாமை