பாரி இருவர் நனிசெல்வம் ஆங்காங்குக் கல்விக் காக நயந்தளித்த பேருள்ளம் கண்ட நாட்டார் நுனிமூக்கிற் சுட்டுவிரல் சேர்த்து, “முன்னை நூலிலன்றி யாங்கணுமே கண்ட தில்லை! இனிநமக்குப் பாரிஎன இருவர் கண்டோம்” எனவியந்தார்; அச்செம்மல் விழைவே போல இனிதெனப்பல் கலைக்கழகம்* ஆதல் வேண்டும் இருநிலத்தில் அவர்புகழும் ஓங்க வேண்டும்(12) பெற்றோரானான் கல்லூரி வட்டத்தில் இனிதி ருந்து கல்விபயில் பன்னூறு மக்கள் காண்பான் எல்லாரும் சான்றோராம் என்று கேட்க இனியதொரு தாயாவான்; ஆடல் பாடல் வல்லார்போல் மாணவர்கள் நிகழ்ந்துங் காலை வள்ளலிவன் தந்தையினும் மகிழ்வே கூர்வான்; நல்லானை நோய்முறிக்க வீழ்ந்த போதும் நயவுரைகள் நகைச்சுவையில் வழங்கி வந்தான்(13) பெரியார் புகழ்ந்தார் முயன்றுபெறும் செல்வமெலாம் தமக்குப் பின்னர் முழுவுரிமை புதல்வர்க்கே ஆதல் உண்மை; அயர்வின்றி இவனுழைப்பால் கண்ட செல்வம் அவனுக்கே சொந்தமெனப் பெரியார் நாவால்* நயந்துரைக்கப் பெரும்பேறு பெற்றா னேனும் நான்சொல்வேன்; பட்டையந்தான் அவற்கே யன்றிப் பயன்முழுதும் நம்மக்கள் துய்க்கின் றாரால் பாடுதும்நாம் பாடுதும்நாம் வள்ளல் பேரே(14)
*அழகப்பர் கல்லூரிகளுக்கே செல்வமெலாம் சேர்வதால் அச்செல்வம் அழகப்பருக்கே சொந்தமாகிறது என நகைச்சுவைபடப் பெரியார் பேசினார். |