62 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
நிலையாமையுணர்ந்தவன் நிலையாமை நிலையாமை என்று சொல்லி நிறைபொருளைத் தொகுப்பார்கள் வகுத்தல் காணார்; அலைவார்கள் இனுஞ்சேர்க்க மேலுஞ் சேர்ப்பர்; ஆனாலும் இன்பமொரு சிறிதுங் காணார்; அலையாழி பலகடந்தே இவனுஞ் சேர்த்தான் அப்படியே வகுத்தளித்தான் தனக்கொன் றில்லான்; நிலையாமை நன்குணர்ந்தான் இவனே அன்றோ? நிலைத்தபுகழ் இன்பமிகக் கொண்டு நின்றான்(15) அவனோர் கஞ்சன்! பொருள்கொடுத்தான் மிகக்கொடுத்தான்; அதனின் மேலாப் புகழ்கொண்டான்; கொடைசிறிது, சிறிய ஒன்றால் அருள்பழுத்தான் கொண்டதுதான் மிகுதி என்பேன்; அதிலென்ன வியப்புளதோ? மேலும் அன்னான் ஒருவகையில் கஞ்சனெனக் குறையும் சொல்வேன்; உவந்தளித்தான் நிதியமெலாம், உண்மை; ஆனால் வருபுகழில் சிறிதேனும் பிறர்க்கீந் தானோ? வருகின்ற புகழெல்லாம் வைத்துக் கொண்டான்(16) எவ்வுயிர்க்கும் அருளாளன் வாடுபயிர் காணுங்கால் வாடி னேனென் றுளங்கனிய வாய்மொழிந்தார் வடலூர் வள்ளல்; ஆடுமலர்க் கொடிகண்ட மற்றோர் வள்ளல் அதுபடரத் தேர்தந்து *படர்து டைத்தான்; சாடுபுயல் வீசுகையில் நமது வள்ளல் தான்வளர்த்த செடிகளெலாம் வீழக் கண்டு வாடியதை நாமுணர்வோம்; எவ்வு யிர்க்கும் வள்ளலென்பார் இரங்கியருள் செய்வர் போலும்(17)
*படர் - துன்பம் |