வள்ளல்களை வென்றான் பாரிவிடும் தேரதனால் வாழ்வு பெற்ற படர்முல்லைக் கொடிஒன்றே; செல்வம் எல்லாம் வாரிவிடும் அழகப்பன் தந்த வீட்டால் வாழ்வுபெறும் பூங்கொடிகள் கணக்கில் உண்டோ? **சோரிவிடத் தலைதந்தான் குமணன் என்பர்; சொல்லரிய பொருளெல்லாம் கல்விக் காக ***மாரிபடத் தந்ததன்மேல் வாழ்வே தந்தான் மனமுள்ளோர் இவன்கொடையின் அருமை காண்பர்(18) படுபெயலால் மிகநனைந்து குளிரால் வாடிப் பதைபதைத்து நடுநடுங்கக் கண்டு, நெஞ்சு துடிதுடித்தே அடடா ஓ! என்று பேகன் துய்யமயில் ஒன்றுக்கே ஈந்தான் போர்வை; கொடையழகன் பலமயில்கள் கற்ப தற்குக் குடியிருக்கும் தன்வீட்டை ஈந்தான் கண்டோம்; கொடைமடத்தால் உளம்பெரிது பேக னுக்கு, கொடுப்பதிலே உரம்பெரிதே அழக னுக்கு(19) தமிழ்நாடு உலகோடு சமம் வண்மைமிகும் ஆய்தன்னால் நமது தெற்கு வடக்கோடு சமமாக நின்ற தென்றார்; உண்மையிது; நானொன்று துணிந்து சொல்வேன்; உறங்கினுமோர் கொடைக்கனவே காணும் நம்பன் வண்மையினால் உலகோடு சமமே என்பேன்; வடக்கென்ன கிடக்கட்டும் என்று ரைப்பேன்; பெண்மையுளார் அஞ்சிடுவர் ஆண்மை கொண்டேன் பேசுகின்றேன் பாடுகின்றேன் மறுப்பும் உண்டோ?(20)
**சோரி - இரத்தம், ***மாரிபட - மழை தோற்க |