பக்கம் எண் :

64கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

மாசு துடைத்தேன்

கொடைத்திறத்தால் புகழ்கொண்டான் பாரி வள்ளல்
    குவலயத்தில் அவன்புகழே விஞ்சக் கண்டு
படைத்திறத்தால் முடியரசர் வேந்தர் மூவர்
    பாரியின்மேல் அழுக்காறு கொண்டு கோட்டைக்
*கடைத்திறப்பு நிகழாமற் சூழ்ந்து நின்றார்;
    கண்டபயன்? மாசொன்றே! கோட்டை யூரன்
கொடைச்சிறப்பால் அரசர்சிலர் அழுக்கா றுற்றார்
    மாசுற்றார் என்கின்ற கொடுஞ்சொற் கேட்டேன்(21)

வள்ளலுக்கு முடியரசர் விளைத்த தீமை
    வடுவாக அமைந்ததுவே! உலக மக்கள்
எள்ளலுக்கும் பொருந்தியதே! என்று நெஞ்சில்
    எழுகின்ற பரிவால்அம் மாசு நீக்க
வள்ளல்புகழ் முடியரசன் பாடு கின்றேன்,
    வண்டமிழாற் பாத்தொடுத்துச் சூட்டுகின்றேன்;
**மள்ளர்மிகு படைவலத்தாற் படைத்தார் மாசு;
    மகிழ்ந்தளிக்கும் ***தொடைநலத்தால் துடைத்தேன் மாசு(22)

பண்பாளன்

இறையன்பு நிறைமனத்தன் எனினும் தந்தை
    எனுந்தேவே தொழுதெழுவான்; உற்ற போது*
நிறையன்பு கொண்டவரை, ஊக்கந் தந்து
    நிலைநிற்கச் செய்தவரை மறவா நன்றி
யறிவுடையன் என்பதனை விடுதி காட்டும்;
    அரசியலில் பிறதுறையில் ஆன்ற சான்றோர்
செறிநண்பு கொண்டமையைப் படங்கள் காட்டும்;
    சிரித்தமுகம் அவன்மனத்துத் தூய்மை காட்டும்(23)


*கடைதிறப்பு என்பது எதுகை நயத்திற்காகக் கடைத் திறப்பு என நின்றது (கதவு திறத்தல்)
**மள்ளர் - வீரர், ***தொடை - தொடைகள் மிகுந்த பாநலம் *உற்றபோது- துயருற்றபோது