68 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
சிந்தித்துச் சீர்தூக்கிச் செப்புகிற நல்லுரையை வந்தித்துப் போற்றி வரவேற்க வேண்டுமடி! “ஆள்கின்ற நாமே அறிஞரிவர் சொற்கேட்டால் தாழ்வன்றோ?” என்னும் தவறான எண்ணத்தால் புத்துலகம் காண்பதில்லை; புற்றுலகங் காட்டிவிடும் தத்தைமொழி! என்றேன்; தடுத்து நிறுத்தி, “அறிஞர் புகழ்பாடல் ஏனத்தான்? நன்கு புரியும் படியாப் புகன்றிடுவீர்” என்றுரைத்தாள்; வானொலியார் கட்டளை கண்ணழகி! வானொலியார் கட்டளைதான், புத்துலகம் பண்ணுதற்கு நல்லறிஞன், பாவல்லான், விஞ்ஞானி, ஏருழவன், வாணிகன்,* இத்தகையார் தம்பங்கில் பேரறிஞன் பங்கிசைக்கப் பேணிக் கொடுத்ததனால் பாடுகின்றேன் என்றதும், அப் பாவை விழிசிவந்து, “நாடு புதுமைபெற நங்கையரைத் தள்ளிவிட்டீர்! புத்துலகில் பெண்ணைப் புதைத்துவிட்டீர்!” என்றெழுந்தாள்; இத்தவறு நானோ இழைத்தேன்? கனிமொழியே! எய்தவனை நோகா தெனைக்கடிந்தாய்! வானொலியார் செய்தபிழைக் கென்செய்வேன்? சேயிழையே! சற்றுக்கேள்! அறிஞன் இல்லா அரசு பொற்சிலம்பை விற்கவந்த பூம்புகார்க் கோவலனைப் பொற்கொல்லன் சொற்கேட்டுப் பொல்லாக் கொலைசெய்து
*அறிஞன், கவிஞன், விஞ்ஞானி, உழவன், வாணிகன் என்பன வானொலி யார் தந்த தலைப்புகள். |