பக்கம் எண் :

72கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

11. குறிஞ்சி

கலிவெண்பா

பாண்டி எமக்களித்த பாரதி தாசனெனும்
பாண்டியனே! எங்கள் பரம்பரைக்கு நற்றலைவா!

சார்ந்து கவியரங்கில் தண்டமிழால் பாப்புனைவீர்!
ஆர்த்திங்கு வந்த அவையோரே! என் வணக்கம்;

வள்ளல் மலை

தூய மனத்தொண்டர் சுப்ரமண்யத் தோன்றல்தமை
மேய புகழ்போல மேலோங்கு நல்லமலை;

பொன்னாடை போர்த்துப் பொலியுமவர் தோற்றம்போல்
மின்னாடு மேகங்கள் மேற்போர்த்த பச்சைமலை;

பண்ணிசைக்கும் வண்டினஞ்சேர் பைம்பொழில்கள் சூழுமலை;
அண்ணலார் நெஞ்சம்போல் தண்ணென் றிருக்குமலை;

வண்ண மலர்தோய்ந்து வாசம் பரிமாற
நண்ணும் குளிர்தென்றல் நாடோறும் வீசுமலை;

வள்ளல் கரம்போல மாணிக்கம் முத்தெல்லாம்
அள்ளி இறைக்கின்ற வெள்ளருவி ஆர்க்குமலை;

வந்தார்க்குத் தந்து மனங்குளிரச் செய்வதற்கு
முந்துவார் போல முகில்குளிரச் செய்யுமலை;