காட்சி அந்த மலைச்சாரல் ஆழச் சுனையாட வந்தேன் ஒருநாள்; வடிவழகி ஆங்கொருத்தி வேங்கைமரத் தின்கீழ் விளையாடும் தோழிகளை நீங்கித் தனியிடத்தில் நின்றிருந்தாள்; அன்னவள்தான் வார்த்தெடுத்த பொற்சிலையோ? வானத்து வெண்ணிலவைப் பேர்த்தெடுத்துச் செய்தஒரு பெண்ணுருவோ? மின்கொடியோ? தேனார்ந்த தாமரையும் செவ்வாம்பல் மென்மலரும் கானார்ந்த நீலக் கருங்குவளைப் போதிரண்டும் எள்ளின் மலரும் எழில் மகிழம் பூவுடனே வெள்ளைநிற முல்லைஅர விந்தத்தின் மொட்டிரண்டும் செங்காந்தட் பூவிரண்டும் சேர்ந்து மலர்ந்திருக்கும் எங்கெங்கும் காணா இளவஞ்சிப் பூங்கொடியோ? ஆடுமயிற் சாயலுடன் அன்னத்தின் மென்னடையும் கூடும் கிளிமொழியின் கூட்டுப் படைப்பாவாள்; சிற்பி மனத்தகத்துக் கற்பனையாற் காண்பதன்றிப் பொற்பின் திருவுருவைப் பூரணமாச் சிற்றுளியால் காட்ட இயலாதே! காவியமும் ஓவியமும் போட்டியிட்டுத் தோற்பதன்றிப் பொற்பெழுதப் போகாத கண்ணுக் கினியாளைக் கண்டேன் விழிவழியே நண்ணிக் கலந்துளத்து நானானாள்; கட்டுண்டேன்; |