வேற்று மணமுறைகள் வேண்டேன் நமதுதமிழ் ஏற்ற செயலொன்றே ஏற்பேன் எனமொழிந்தேன்; ‘ஆழச் சுனையகத்தே ஆருயிரைக் காத்தமையால் வேழத் திறலுடையீர்! வென்றுகொண்டீர் என்னுளத்தை; அன்றே உமக்காக ஆக்கிவிட்டேன் மெய்யுயிரை; நன்றே மணம்பெறுவோம் நாயகரே!’ என்றுரைத்தாள்; ஒன்றானோம் ஓங்கு மலைக்குறிஞ்சி உண்டாக்கும் ஆறுவந்து தேங்கி மருதத்தைச் சீராக்கிக் காட்டுதல்போல் நற்குறிஞ்சி ஈன்றெடுத்த நங்காய் எனைக்கூடி வற்புடைய வாழ்வை வளமாக்கி வீறளித்தாய்! நன்செய் மருதநிலம் நம்குறிஞ்சிப் பார்வையின்றேல் புன்செய் நிலமுமிலாப் புல்லென்ற பாலைநிலம்; அவ்வண்ணம் நீயின்றேல் அன்பனென் வாழ்வெல்லாம் பொய்வண்ண வாழ்வாகி வன்பாலை போலாகும் என்றேன்; அவள்மறித்(து) ‘அவ்வா றுரையாதீர் ஒன்றானோம் நாமினிமேல் உற்றதுணை நீரானீர் திங்கள் முடிசூடித் தேனருவி ஆர்க்கின்ற எங்கள் குறிஞ்சி எழில்காண்போம்’ என்றுரைத்தாள்; அச்சமில்லை கொல்லும் விலங்கெல்லாம் கூடித் திரிவதனால் மெல்லியல்நீ அஞ்சுவையே என்னலும்அம் மேன்மகள்தான் ‘யானை புலிகரடி யாழிசைத்தால் தாழ்ந்துநிற்கும் *ஏனல் வனங்காப்பேன் ஏதச்சம்? என்றுரைத்தாள்;
*ஏனல்வனம் - தினைப்புனம் |