இவ்வுரைத்த குறையன்றிக் காண கில்லேன்; இனிஎனைநீ காத்தளித்த பண்பு சொல்வேன்; அவ்வைக்கு நெடுங்காலம் உயிர்நி லைக்க அதியனெனும் ஒருவள்ளல் இருந்தான் முன்னாள்; உய்வித்துச் சிறியேனை நீண்ட காலம் உயிர்வாழ அருளினைநீ; எனக்கும் அந்த அவ்வைக்கும் வள்ளல்களை ஈந்து காத்த அத்தமிழைச் செந்தமிழை வணங்கு கின்றேன்(11) குருதியுமிழ் கொடுநோய்க்கே ஆளாய் நின்றேன் குறுநகையும் பெருநகையும் இழந்து நின்றேன் செறுபகையும் எனைக்காணின் இரங்கி நிற்கும் செயலற்றேன் நடைதளர்ந்தேன் உடல்மெ லிந்தேன் மறுபடியும் உயிர்வாழ்வேன் என்ற எண்ணம் மாய்ந்துவிட மாயாத கவலை கொண்டேன்; “உறுதியுனைக் காக்கின்றேன்” என்று வந்தென் உயிர்காத்தாய்! உன்னருளால் வாழ்கின் றேன்நான்(12) உயிர்காத்த உத்தமனே! என்பாற் கண்ட உயர்வென்ன? தமிழன்றி வேறொன் றில்லை; செயிரில்லாச் செந்தமிழைப் பாடும் வாயில் செங்குருதி சிந்துவதா எனநி னைந்தோ? உயிர்பிழைத்தால் இவனும்போய்த் தமிழைக் காப்பான் உயர்கவிதை பலதருவான் எனுங்க ருத்தோ? அயர்வின்றி அருகிருந்து காத்த தாயே! ஆலயமாம் என்னுளத்தில் அமருந் தேவே!(13) தாய்தந்தை நல்லன்பைக் கண்டேன் அல்லேன் தகுபொழுதில் உதவுவதற் குறவு மில்லேன் நோய்வந்து மனத்துயரால் மாழ்குங் காலை நுவலரிய தனித்துணையாய் இராமச் சந்திரச்* சேய்கொண்டு மனநோவைத் தீர்த்து வைத்துச் சிறியேனை நின்குடும்பத் தொருவன் ஆக்கிச் சேய்போல ஆட்கொண்டாய்! அன்பு செய்தாய்! செம்மனத்தோய்! கைம்மாறு யாது செய்வேன்?(14)
*இப்பாடல் வஞ்சப் புகழ்ச்சியணி |