பக்கம் எண் :

84கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

எந்நாளும் உன்பெயரைச் சொல்லிச் சொல்லி
    ஏத்துவதே தொழிலானேன் என்றன் சேய்க்குப்
பொன்னான நின்பெயரைச் சூட்டி நெஞ்சில்
    பூசித்து மகிழ்கின்றேன் போற்று கின்றேன்
நின்பேரன் என்மகனாம் கார ணத்தால்
    நீஎனக்குத் தந்தைமுறை ஆகி விட்டாய்
என்னபிழை நான்செயினும் பொறுத்தல் வேண்டும்
    என்தந்தாய்! பொன்தந்தாய்! புகழும் தந்தாய்!(15)

என்னுயிரைக் காத்தமையால் தன்க ழுத்தில்
    எழிற்றாலி மின்னுவதைக் கண்டு நெஞ்சால்
என்மனையாள் வாழ்த்துகின்றாள்; என்றன் சேய்கள்
    எம்தந்தை தந்தாயென் றேத்து கின்றார்;
நன்மழலைச் செல்வர்களைக், காதல் வாழ்வின்
    நற்றுணையை நான்மீண்டுங் காணச் செய்த
உன்னுதவி நாடோறும் ஏத்து கின்றேன்;
    உயிரனையாய்! திருவடியை வாழ்த்துகின்றேன்.(16)

தலைவர்:புதுக்கோட்டைத் திருக்குறள் கழகத் தலைவர்

தலைப்பு:அண்ணல் பு. அ. சுப்பிரமணியனார்

இடம்:மணிவிழாவில் மனம் நெகிழப் பாடிய பாடல்

நாள்:19-10-1958


*இராமச்சந்திரச் சேய் - புதுககோட்டை மருத்துவப் பேரறிஞர் டாக்டர் வி.கே.இராமச்சந்திரனார், இவரும் அண்ணலால் உகுவாக்கப்பட்டவராதலின் சேய் எனப்பட்டார்.