பக்கம் எண் :

86கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை
    மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்;

தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத்
    தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்;

மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு
    மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்.(3)

ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும்
    ஆள்கஎனத் துஞ்சாமல், தமது நாட்டின்

மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்;
    மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது

காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக்
    கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்;

தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்
    தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்.(4)

முடியரசன்

படைவலியால் நிலவுலகை ஆள்வர் மன்னர்;
    பாவலனாம் பாரதியோ உணர்ச்சி யூட்டும்

*தொடைவலியால் வையத்தை ஆண்டு கொண்டு
    தொழுதேத்தும் முடியரசன் ஆனான் கண்டீர்!

நடையழகு விளங்குகவி யரசன் பாட்டு
    நாடாண்ட பேரரசை நடுங்க வைத்த

படைவரிசை; அப்படையால் உரிமை வேட்கை
    பாருக்கு நல்கியவன் வீரன் அன்றோ?(5)

பாட்டு மறவன்

இருளடைந்த கண்களுக்கும் ஒளியை யூட்டி
    இடிகின்ற நெஞ்சத்தில் உறுதி ஏற்றி


*தொடைவலி - பாட்டு வல்லமை