பக்கம் எண் :

88கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

பணிவித்து நயவஞ்சர் துணையால் நாட்டைப்
    பாழ்படுத்திப் பக்குவமா அடிமை யாக்கித்

துணிவுளத்தால் ஆண்டிருந்த வெள்ளை ஆட்சி
    தூள்தூளாய்ப் போவதற்குத் தமிழர் நாட்டில்

அணிவகுத்த வீரர்தமை ஆக்கித் தந்த
    ஆண்மகன்யார்? பாரதிதான் வீரன் அன்றோ?(9)

வஞ்சினம்

“மிகவிரைவில் தமிழின்ஒளி உலகம் எங்கும்
    மேலோங்கும்; இலையேல்என் பெயரை மாற்றி

இகழுங்கள்” எனக்கனன்று சூளு ரைத்தான்;
    எவர்மொழிக்கும் தலைவணங்கும் நம்மை நோக்கிப்

“புகழ்மிக்க தமிழ்மொழியை உலக மெல்லாம்,
    புகுகின்ற தெருவெல்லாம் முழங்கச் செய்வீர்!

வகைகெட்டுப் போகாதீர்!” என்று ரைத்து
    வாழ்வுதந்த வீரனுக்கு வணக்கம் செய்வோம்(10)

“பொய்மிகுந்து துயர்செய்யும் கலியைக் கொன்று
    பூவுலகில் கிருதயுகம் கொணர்வேன்” என்ற

மெய்மிகுந்த பேராற்றல் கொண்ட வீரன்;
    மிகைசெய்யும் பழமையினைச் சாடி, மக்கள்

உய்வழியைத் தருவீரன்; “ஒருவன் உண்ண
    உணவின்றேல் உலகத்தை அழிப்போம்” என்று

கைவலிமை காட்டியவன் பாடல் எல்லாம்
    காட்டுகிற வீரத்தைக் காட்டப் போமோ?(11)

காலனெனப் பேர்சொன்னால் போதும் நம்மோர்
    கால்நடுங்கும் கைநடுங்கும் துடிப்ப டங்கும்

மேலனைத்தும் வியர்வரும்பும்; மனிதன் பண்பாம்;
    வீரமிகும் நெஞ்சுடையான் அஞ்சான்; கூற்றைக்