பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 89

காலனெனும் பேரானைக் கூவி, உன்னைப்
    புல்லெனவே கருதுகின்றேன் வாடா என்றன்

காலருகே மிதிக்கின்றேன்” என்று ரைத்த
    கவிவீரம் நினைப்போர்க்கு வீரம் ஊட்டும்(12)

அச்சமிலான்

பாண்டவரில் மூத்தவனாம் தருமன் தன்னைப்
    பண்புடையான் அறமுடையான் என்று சொல்லி

ஆண்டவனாப் போற்றுகின்றார்; அவனி ழைத்த
    பெரும்பிழையை ஆர்சொல்வார்? அஞ்சு கின்றார்;

“தீண்டரிய சூதாடிப் பணயம் என்று
    தேயத்தை வைத்திழந்தான்; சீசீ நாட்டை

ஆண்டஇவன் சிறியர்செயல் செய்தான்” என்றே
    அரசுமுறை பிழைத்தமையை வீரன் சொன்னான்(13)

சாதிப் பூசல்

சாதியினால் தாழ்வுயர்வு பேசிப் பேசிச்
    சாத்திரத்தை வேதத்தைச் சான்று காட்டிப்

பாதியில்நாம் படுகுழியில் வீழ்ந்து விட்டோம்;
    பறையனென்றும் குறவனென்றும் பார்ப்பான் என்றும்

ஆதியிலே இல்லாத பழக்கந் தன்னை
    அணுகவிட்டோம்; அடிமையுற்றோம்; மிடிமைப் பட்டோம்;

ஆதலினால் சாதியினை ஒழிக்க வேண்டி
    ‘ஆடுவமே’ எனும்பாடல் பாடித் தந்தான்(14)

தோற்றுவிட்டான்!

பொல்லாத கொடுமைகளை விளைத்து நிற்கும்
    பொய்ம்மைகளை அழித்தொழிக்கும் சாதிப் போரில்

எல்லாரும் ஓர்குலமாய் வாழ்க என்றும்
    எல்லாரும் சமமென்ப துறுதி யென்றும்