பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 9

கற்பு நெறியில்

ஐவருக்குப் பத்தினியாய் இருந்துங் கூட
    அயலான்மேல் ஆசையுள தென்று ரைத்த
மைவிளைக்கும் கண்ணுடையாள் கற்பின் போக்கு
    மாண்புடைய தமிழ்வாழ்வா? வெட்கம் வெட்கம்!
கைவிளைத்த பொருளெல்லாம் பரத்தைக் காக்கிக்
    கணவனவட் பிரிந்திருந்தும் தனது நெஞ்சில்
மொய்விளைக்கும் நிறைகாத்து வாழ்ந்த எங்கள்
    முன்னையவள் கற்பன்றோ தமிழ வாழ்வு!(18)

கொலையுண்டான் காதலன்தான் என்ற செய்தி
    கூர்வேலாய்த் தைத்தலுமே செல்வ மெல்லாம்
நிலையுண்ட அறச்செயலுக் காக்கித் தூய
    நெறிநின்றாள் மாதவித்தாய்! விஞ்சு காம
வலையுண்ட இந்திரனைத் தழுவி நின்ற
    வடிவழகி அகலிகையும் மேன்மை பெற்றாள்,
துலைகொண்ட கோல்போல ஆய்ந்து காணின்
    தூயதமிழ் வாழ்வுதனைத் தெரிந்து கொள்வீர்(19)

ஒருமை கொள்க!

அரசியற்கும் பொருளியற்கும் சாதி கட்கும்
    அப்படியே மொழியியற்கும் ஒவ்வோர் கட்சி
பரவிவரக் காண்கின்றோம், ஒன்றுக் கொன்று
    பலங்கொண்டு தாக்குவதும் காணு கின்றோம்
விரவியிவை வளருவதால் தமிழர் வாழ்வில்
    விளைபயன்தான் ஒன்றுண்டோ? அனைத்துங் கூடி
ஒருநிலையாய் ஓரமைப்பாய் இயங்கக் கண்டால்
    உளதாகும் தமிழ்வாழ்வு; இன்றேல் தாழ்வே(20)