பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 95

தெக்கணத்துத் திருநாடு தமிழர் நாடு
    தெளிந்துரைத்த திருக்குறளே; அதையு ணர்ந்து

பக்குவமா நாமணுகி மதித்துப் போற்றிப்
    பண்புரைக்குந் திருமறையாக் காத்தல் வேண்டும்

பொக்கைமனங் கொண்டவர்கள் வள்ளு வற்குப்
    புண்செய்து திரிகின்றார் போதும் போதும்(9)

கற்றுக்குட்டிகள்

கற்றறிந்த சான்றோரும் திருக்கு றட்குக்
    கண்டுணர்ந்து பொருள்சொல்ல அஞ்சு கின்றார்;

சிற்றறிவால் தமிழ்நூலின் பெயர்கள் தாமும்
    தெரியாதார் புத்துரைகள் சொல்லப் போந்தார்!

கற்றினங்கள் சிறுகுட்டை கலக்கல் ஆகும்
    கடல்தனையே சேறாகக் கலக்க எண்ணின்

முற்றுறுமோ? நீந்துதற்குச் சிறிதும் கல்லார்
    முழுகாதீர் குறட்கடலுள் என்போம் என்போம்(10)

சிலையானோம்!

கண்டபடி கண்டவர்கள் தமிழர் நூலைக்
    கதைக்கின்றார் குழப்புகின்றார் கேட்பா ரில்லை;

மண்டையடி கொடுப்பதற்கோ சங்க மில்லை;
    மனம்வைத்துக் காப்பதற்கோ அரசும் இல்லை;

உண்டபடி உறங்குகின்றார் மக்கள் எல்லாம்
    உய்வதுதான் எப்படியோ தமிழும் நாமும்?

அண்டையர்கள் மொழிகாக்கும் முறைமை கண்டும்
    அசையாத சிலையானோம் அந்தோ! அந்தோ!(11)

அரிபோல் எழுவோம்

இனியேனும் திருக்குறளை மதிப்போம் காப்போம்;
    இனிதான அறநெறியை உரைப்போம் கொள்வோம்;