பக்கம் எண் :

98கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

எந்நாளும் மாறா இயல்பமைந்த எல்லையதாய்,
இந்நான்கின் எல்லை யிடைவிரிந்த நீள்பரப்பாய்க்,
கன்னடமாய் ஆந்திரமாய்க் கண்குளிரும் கேரளமாய்
இன்னவற்றின் தாயாய் இலங்கும் தமிழகமாய்க்,
கூடும் திராவிடமாய்க் கோலோச்சும் தென்னகமே
நாடி வருகின்ற நம்நாடு பொன்னாடு;

புனல் வளம்

நாடா வளத்ததுவாய் நாடி வருவோர்க்குக்
கோடா மனத்தால் கொடுக்கும் இயல்புடைத்தாய்த்,
தள்ளா விளைவயலில் தாளாற்றும் ஏருழவர்
கொள்ளா துழைத்துக் குவிக்கும் வளத்ததுவாய்,
வான மழைநீரும் வற்றாத ஊற்றகமும்
கான மலையுதித்துக் காக்கின்ற ஆறுகளும்
ஆயபுனல் மூன்றாலும் ஆக்கும் பெரும்பொருளால்
தேயமெலாம் வேட்கின்ற சீர்மைத் தகைமைத்தாய்,
வள்ளுவம் காட்டும் வளமெல்லாம் தன்னகத்துக்
கொள்ளும் திருநாடே கூட்டாட்சித் தென்னாடு;

குறிஞ்சி வளம்

நீளும் தொடர்மலைகள், நெஞ்சம் கவருமெழில்
ஆளும் உயர்மலைகள், கோடை அனல்போக்கும்
வண்ணக் குளிர்மலைகள், வாய்க்கும் பழமலைகள்,
எண்ணக் குறையாமல் எத்துணையோ ஈங்குண்டு;
தென்னாட்டார் வீரம் தெரியாமல் போர்தொடுத்து
*வெந்காட்டி மாற்றுருவில் ஓடிமறை வீரரைப்போல்
ஓங்கும் மலைமேல் உராயும் முகிற்கூட்டம்
தேங்கிக் குளிர்தாக்கத் தேய்ந்தே உருமாறி,
நீராகி, ஆறாகி நிற்காமல் ஓடிஒரு
பேராழி யுள்மறையும் பெற்றிமையும் ஈங்கிருக்கும்;