106 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
விண்வழியில் மிதந்துவந்தான் மானுடத்தின் வெற்றியிது வெனமகிழ்ந்தேன் வீறுங் கொண்டேன்; மண்வழியை மறந்துவிட்டான் மானு டத்தின் மறுதோல்வி எனவீழ்ந்தேன் மயக்கங் கொண்டேன். வாழ்வென்னும் வழியதனிற் செல்லும் போது வழுவாமல் நடுவில்தான் நடத்தல் வேண்டும் பாழ்மனிதன் அதைமறந்தான் ஓரஞ் சென்றே பழகிவிட்டான்; கடைத்தெருவில் ஏகுங் காலை நீள்வழியின் ஓரத்தே நடத்தல் வேண்டும் நெடுமனிதன் நடுவில்தான் செல்லு கின்றான் சூழ்மதியன் எதுசெயினும் மாறு பட்டே தொலைகின்றான் ஆறறிவிற் குறைந்தே போனான். துறவுநிலை தனைநோக்கின் மனந்தி றந்து சொல்வதற்கோ வழியில்லை; வாணி கந்தான் கரவுகளுக் கிருப்பிடமாம்; கல்விக் கூடம் கட்டவிழப் பயில்களமாம்; கோவி லென்றால் திருடர்களும் கயவர்களும் மறைந்து கொள்ளத் தேர்ந்தெடுத்த குகையாகும்; மாக்கள் போல அறநெறியை அறமறந்தார் வெறியுங் கொண்டார் அதனைத்தான் மதமென்றும் விளம்பு கின்றார். நானெடுத்து மொழிந்தவெலாம் பொய்ம்மை யன்று; நாட்டகத்தே இச்செயல்கள் மலியக் கண்டேன் மானுடத்தைக் காண்பதெங்கே? பேசு கின்ற மாவினத்தைக் காண்கின்றேன் யாது சொல்வேன்? ஊனெடுத்த உடலாலோ உடலை மூடும் உடையாலோ உணவாலோ ஊர்தி யாலோ மானுடத்தின் நிலைஎய்த இயலா தாகும் மனப்பண்பு மிக்கவரே மக்க ளாவர். |