பக்கம் எண் :

106கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

விண்வழியில் மிதந்துவந்தான் மானுடத்தின்
      வெற்றியிது வெனமகிழ்ந்தேன் வீறுங் கொண்டேன்;
மண்வழியை மறந்துவிட்டான் மானு டத்தின்
      மறுதோல்வி எனவீழ்ந்தேன் மயக்கங் கொண்டேன்.

வாழ்வென்னும் வழியதனிற் செல்லும் போது
      வழுவாமல் நடுவில்தான் நடத்தல் வேண்டும்
பாழ்மனிதன் அதைமறந்தான் ஓரஞ் சென்றே
      பழகிவிட்டான்; கடைத்தெருவில் ஏகுங் காலை
நீள்வழியின் ஓரத்தே நடத்தல் வேண்டும்
      நெடுமனிதன் நடுவில்தான் செல்லு கின்றான்
சூழ்மதியன் எதுசெயினும் மாறு பட்டே
      தொலைகின்றான் ஆறறிவிற் குறைந்தே போனான்.

துறவுநிலை தனைநோக்கின் மனந்தி றந்து
      சொல்வதற்கோ வழியில்லை; வாணி கந்தான்
கரவுகளுக் கிருப்பிடமாம்; கல்விக் கூடம்
      கட்டவிழப் பயில்களமாம்; கோவி லென்றால்
திருடர்களும் கயவர்களும் மறைந்து கொள்ளத்
      தேர்ந்தெடுத்த குகையாகும்; மாக்கள் போல
அறநெறியை அறமறந்தார் வெறியுங் கொண்டார்
      அதனைத்தான் மதமென்றும் விளம்பு கின்றார்.

நானெடுத்து மொழிந்தவெலாம் பொய்ம்மை யன்று;
      நாட்டகத்தே இச்செயல்கள் மலியக் கண்டேன்
மானுடத்தைக் காண்பதெங்கே? பேசு கின்ற
      மாவினத்தைக் காண்கின்றேன் யாது சொல்வேன்?
ஊனெடுத்த உடலாலோ உடலை மூடும்
      உடையாலோ உணவாலோ ஊர்தி யாலோ
மானுடத்தின் நிலைஎய்த இயலா தாகும்
      மனப்பண்பு மிக்கவரே மக்க ளாவர்.