பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்107

மற்றவர்தம் துன்பத்தைக் காணும் போது
      மனமுருகி விரைந்தணுகி அதனை நீக்கக்
கற்றவனே கற்றவனாம்; உதவும் பண்பைக்
      கல்லாதான் கல்விபல கற்றா னேனும்
முற்றியநல் மரம்போல்வான்; மரத்தில் ஒன்று
      முரிந்தொடிந்து வீழ்ந்திடுமேல் நிற்கும் ஒன்று
மற்றதற்கு மனமிரங்கி உதவ லுண்டோ?
      மானிடனும் அவ்வாறு நிற்றல் நன்றோ?

மற்றவர்க்கே உரியதனைக் கவர்வ தற்கு
      மனத்தாலே நினைத்தாலும் கவர்ந்த தைப்போல்
குற்றமெனக் கருதுகின்ற உணர்வு வேண்டும்;
      குறைவறியா அறநூல்கள் உரைத்த வற்றைக்
கற்றபடி கடைப்பிடித்து நடத்தல் வேண்டும்;
      கற்றவர்கள், பெரியவர்கள், தந்தை தாயர்
சொற்றபடி நடக்கின்ற ஆர்வம் வேண்டும்;
      தூய்மையிலே தோய்கின்ற நெஞ்சம் வேண்டும்,

சாதியினால் பதவியினால் சமயப் போக்கால்
      தாழ்ந்தவரும் உயர்ந்தவரும் இல்லை யென்றே
ஓதுவதாற் பயனில்லை; உள்ளம் ஒன்றி
      உடன்பிறப்பென் றனைவரையுஞ் சமமாக் கொண்டு
மேதினியில் வாழ்வதுதான் மானி டர்க்கு
      மேன்மைதருஞ் செயலாகும் மேல்கீழ் எல்லாம்
வேதமொழி எனவந்தால் மக்கள் இங்கு
      வேறாகி மாக்களென நீண்டு நிற்பர்.

கடமைசெயத் தயங்குகிறோம்; கண்ணி யத்தைக்
      காற்றின்மிசைப் பறக்கவிட்டோம்; கட்டுப் பாட்டை
அடிமைநிலை எனக்கருதி உதறி விட்டோம்;
      ஆதலினால் மானுடத்தைச் சீர ழித்தோம்;
கெடுவினையை விட்டொழித்தால் அருவ ருக்கும்
      கீழ்மைதனைச் சுட்டெரித்தால், இருளில் வீழ்த்தும்
மடமையினைத் தகர்த்தெறிந்தால், மக்கட் பண்பை
      மதித்திருந்தால் மானுடமே வெல்லும் வெல்லும்.