108 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
3 அந்தோ அரசியலே! எண்சீர் விருத்தம் ஓலிபெருக்கி முழங்கிற்றுச் சற்று நின்றேன்; உணர்ச்சிமிக்க பேச்சாளர் தமது நெஞ்சில் வலிவிருக்கும் வரைகத்திப் பழித்துக் கூறி வாய்க்குவந்த படியெல்லாம் பொழிந்தார் மாரி; அலிஎனத்தன் நிலைமறந்து மாறி மாறி அரசியலை விளையாட்டுக் களமாக் கொண்டார்; பலிகொடுக்க ஏமாளிக் கூட்ட முண்டு பாவையென ஆட்டுகிறார் பகட்டுக் காரர். காலையிலே ஒன்றுரைப்பார் மாலை வந்தால் கட்சியினைக் கொள்கையினை மாற்றி நிற்பார்; ஓலையிலே விழுந்தபுனல் போல அங்கும் ஒட்டாமல் ஓடிடுவார்; விடிந்த பின்னர் காலையிலே சொன்னதுதான் உண்மை என்பார்; காசுக்குப் பாய்விரிக்கும் பெண்டிர் ஆனார்; நூலறியார், அரசியலிற் கேடு செய்ய *நோய்நுண்மம் படர்ந்ததுபோல் படர்ந்து விட்டார். அறமுரைக்கும் பெருநூல்கள் நமது நாட்டில் ஆயிரங்கள் உண்டென்பர்; ஆனால் அந்த அறமனைத்தும் நூல்களுக்குள் அடக்க மன்றி ஆறறிவு படைத்தவர்பால் அரும்ப வில்லை;
*நோய்நுண்மம் - நோய்க்கிருமி |