பக்கம் எண் :

110கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

4
அரசியல் அரங்கம்

நண்பரும் பகையாய் நலிவுகள் தரலாம்,
பகைவரும் நண்பாய்ப் பரிவுடன் வரலாம்
இருவரும் ஒருநாள் மாறலும் மாறலாம்,
அரசியல் மேடை உரைசெயும் பாடம்
ஈதென உணர்ந்தனம்; ஆதலின் அவர்தாம்
தீதெனப் பழித்தும் மேலென உயர்த்தும்
மேடையில் உரைப்பன மெய்ம்மைகள் ஆகா;
நாடக மொழியென நம்புதும் யாமே;
இனமொழி நாடென இயம்புவர் ஒருநாள்;
மனமொழி மாறி மயங்குவர் மறுநாள்;
தொண்டெனும் போர்வையில் தோன்றுவோர் பலராய்
மண்டித் திரிதலின் மக்களும் மயங்கினர்
மெய்ம்மையை மறைக்கும் பொய்ம்மைகள் பல்கலால்
பொய்யெது மெய்யெது புலப்படா தொழிந்தன;
அதனால்
ஒருவரை அளவின் றுயர்த்தலும் இலமே
ஒருவரை இகழ்தல் அதனினும் இலமே.

16.4.1978