பக்கம் எண் :

112கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

புதுமைமிகும் இலக்கியத்தேன் சேர்த்தல் ஒன்றே
      பொறுப்புள்ள எழுத்தாளர் கடமை யாகும்;
இதழ்சுவைத்து மதுவருந்தித் திரிவோ ரெல்லாம்
      எழுத்தாளர் அல்லரெனும் உண்மை கண்டேன்.

வண்டொன்று பாடிவரக் கண்டேன் அங்கு
      வண்ணமலர்த் தேன்குடித்து மயங்கி இன்பம்
கண்டவுடன் அறிவிழந்து சோலை எங்கும்
      கண்டகண்ட மலர்தோறும் மாறி மாறிக்
கொண்டிருந்து பண்பாடித் திரிதல் கண்டேன்;
      குடிக்கின்ற எழுத்தாளர் கொள்கை மாறிக்
கண்டபடி பாடிவரும் இயல்பைக் காட்டிக்
      களிவண்டு தனைமறந்து வீழ்ந்த தந்தோ!

எழுத்தாளர் எனச்சொல்லி நிலையே யின்றி
      இன்றொன்றும் நேற்றொன்றும் குழப்பும் பாங்கில்
முழுத்தாளில் அச்சடித்து விற்போ ரெல்லாம்
      முதன்மைபெறும் எழுத்தாளர் போல நின்று
கொழுத்தார்கள் நாட்டுக்குப் பயனே இல்லை;
      கும்பிக்கும் புகழுக்கும் மொழியை நாட்டைப்
பழித்தார்கள் பிழைத்தார்கள் இவரால் நாடு
      பாழாகும் விழிப்புணர்வு நமக்கு வேண்டும்;

அப்பாலோர் மரக்கிளையில் ஓந்தி கண்டேன்
      அழகொழுகும் பச்சையொடு சிவப்பு மஞ்சள்
இப்பாலே கருவண்ணம் காட்டிக் காட்டி
      இமைப்பினிலே நிறமாறும் விந்தை கண்டேன்;
அப்பாவி மக்களிடை மாறி மாறி
      அரசியலில் நிறமாறும் மாந்தர் செய்கை
செப்பாமற் செப்புவதை நானு ணர்ந்தேன்
      சிந்தையெலாம் மிகவுளைந்து திரும்பி விட்டேன்.