பக்கம் எண் :

114கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

6
நாடு உருப்படுமா?

நாட்டுக்கு நன்மைசெய நாடும் அரசியலைக்
கேட்டுக்கே ஆக்கிக் கிடைத்தவெலாஞ் சுற்றுகிற
தந்நலத்தை நாடும் தகவில்லாத் தன்மையரை
இந்நிலத்தே காணுங்கால் ஏங்கித் தவிக்கின்றேன்;
இங்கொன்றும் அங்கொன்றும் ஏற்ற படியுரைத்து
தங்கள் நலங்காக்கச் சண்டைகளை மூட்டிவிட்டும்
ஒட்டி யிருந்தாரை வெட்டிப் பிரித்துவிட்டும்
கிட்டும் பொருள்சுருட்டும் கீழ்மை நரிக்குணத்தர்,
நேற்றொன்றும் இன்றொன்றும் நேரியர்போல் பேசிவிட்டுக்
காற்றடிக்கும் பக்கம் கடிதோடிச் செல்பவர்கள்,
ஏழையர்தம் வாழ்வுக்கே இப்பிறவி கொண்டதுபோல்
வேளையெல்லாம் பொய்சொல்லி வேட்டை புரிபவர்கள்,
சாதி ஒழிப்பதெனச் சாற்றிவிட்டுத் தேர்தலுக்குத்
தேதி வரும்போது சாதிக்குக் காப்பளிப்போர்,
கூடி அரசியலைக் கொண்டு நடத்துவரேல்
நாடிங் குருப்படுமோ நன்கு?

1.3.1970