பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்115

7
தேர்தல் திருவிழா

(கலிவெண்பா)

தேர்தல் திருவிழா என்றிங்குச் செப்பிவைத்த
சீர்மை மிகநன்று; சீர்தூக்கிப் பார்த்திடுவோம்;
உள்ளூறும் அன்பால் உருகும் அடியவரும்
*அள்ளூறி நின்றிருப்பர் அந்தத் திருநாளில்;
உள்ளத்தில் வஞ்சம் ஒளித்தமைத்துச் செய்கின்ற
கள்ளத்தை யாருமே காணா வகைசெய்யப்
பூச்சால் மணியால் பொதிந்த திருமேனி
ஆச்சார சீலர் அவரும் அருகிருப்பர்;
தின்பண்டம் விற்போரும் செய்தசிறு பாவைகளை
முன்வந்து விற்போரும் மொய்த்தங்கு நிற்றலுண்டு;
ஆண்பாலர் பெண்பாலர் ஆடுஞ் சிறுபாலர்
காண்பார் பெரும்பாலோர் கைகளையும் பைகளையும்
கண்ணால் துருவுகின்ற கைவரிசைக் காரர்களும்
பின்னால் தொடர்ந்து பெரியவர்போல் நின்றிருப்பர்;
காதுகளும் நோவாமல் யாருமதைக் காணாமல்
மோதுகிற கத்திரியும் முன்னிற்கும்; அஃதேபோல்
நாட்டுக்குத் தொண்டுசெயும் நல்லெண்ணங் கொண்டோரும்
வேட்டிங்குத் தேர்தலிலே வேட்பாளர் ஆவதுண்டு;
நாளெல்லாம் ஊரார்பால் நம்பும் படிபேசி
வாழ்வெல்லாம் பொய்க்கின்ற வஞ்சம் தனைமறைக்கச்
சட்டைத் துணிமாற்றி தாயகத்தைக் காப்பனென

ஒட்டித் திரிகின்ற உத்தமரும் நிற்பதுண்டு;
வீரங்கள் பேசிவிட்டு வேட்பாள ராய்நின்று


*அள்ளூறி - மனமுருகி