116 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
பேரங்கள் பேசும் பெருமனிதர் தாமுமுண்டு; விண்ணப்பந் தந்துவிட்டு வீட்டிற்குச் சென்றவுடன் எண்ணத்தில் சூழ்ச்சிமுறை எத்துணையோ எண்ணியெண்ணி எங்குப் பணங்கிடைக்கும் என்று தவங்கிடக்கும் தங்கக் குணம்படைத்தோர் தாளுருவங் கண்டவுடன் முன்வாங்கிக் கொண்டு முகமூடிச் சென்றுடனே பின்வாங்கிப் போய்ப் பதுங்கும் பேதையருங் காண்பதுண்டு; முன்னாளில் இந்நாட்டில் தேர்தல் நடந்ததுண்டு- அந்நாளில் தென்னாட்டார் ஆக்கிவைத்த தேர்வுமுறை எந்நாடுங் காணாத ஏற்றந் தருமுறையாம் அன்னார் குடவோலை என்றே அதைச்சொல்வர் தக்கர்யார் நிற்கத் தகுதியிலார் யாரென்றே அக்கால மக்கள் அமைத்த விதியுண்டு; கையூட்டுப் பெற்றார், களவாடல் செய்தவர்கள், பொய்ச்சான்று சொன்னோர் புகுந்தகுதி யில்லாரே என்றுரைத்த சட்டத்தை இன்றெடுத்து நோக்குவமேல் நின்றிங்கு மிஞ்சுபவர் நேர்பாதி காண்பரிது; தொண்டறியார் ஆட்சிமுறை கண்டறியார் தங்கருத்தை விண்டறியார் ஆனாலும் வேட்பாளர் ஆகிநின்று மக்கள் தமையணுகி மாயங்கள் செய்வதெலாம் மிக்க நகையாகும்; மேட்டுக் குடிவாணர் வீட்டுக்கு வீடு வெளிநின்று பல்லெல்லாம் காட்டுதற்கு நாணார்; கலிகாணா மேனி வளையும் குழையும் வணங்கித் துவண்டு நெளியும் மறுநாள் நிமிரும் அடடா! நடக்காத கால்கள் நடந்துவரும், ஒன்றுங் கொடுக்காத கைகள் கொடுத்துவரும்; தேர்தலிலே வாக்காளர் எல்லோரும் வானுறையுந் தெய்வங்கள் பார்க்காத பேரெல்லாம் பார்த்திடுவர் கும்பிடுவர்; வெற்றி கிடைத்துவிடின் வேட்பாளர் மேலாவர் வெற்றுப் படிக்கல்லாய் வீழ்ந்திடுவர் வாக்காளர்; மாண்டவரும் மீண்டுவரும் மாய விளையாட்டைக் காண்டல் எளிதாகும் இந்தத் திருநாளில்; விந்தைமிகும் வேடிக்கை எத்துணையோ தேர்தலெனும் சந்தையிலே காணும், சதிகள் விளையாடும்; நிற்பவர்கள் நிற்கட்டும் நேர்மை நிலைநாட்டல் கற்றவர்க்கும் மற்றவர்க்கும் உற்ற கடனாகும்; தீட்டுகிற திட்டத்தால் ஈட்டும் வளமெல்லாம் நாட்டில் ஒருதிசையில் நன்கு வளர்ப்பவர்தாம் தேய ஒருமைஎன்று தீந்தமிழை மாய்ப்பதற்கே ஆய வழிவகைகள் ஆற்றும் நிலைகண்டோம்; இந்தி மொழியொன்றை இங்கே திணிக்கின்றார் அந்தநிலை போதாதென் றன்று தமிழ்மாந்தர் ஆய்ந்தமைந்த நல்லெழுத்தை அப்படியே நீக்கிவிட்டுக் காய்ந்து சிறுகயிற்றில் தொங்குகிற *கண்டம்போல் நேர்கோட்டில் தொங்கும் நெளிவெழுத்தைக் காட்டுகிறார் யார்கேட்பர் இந்நாட்டில் என்னும் நினைவவர்க்கு; நம்பால் இவர்தாமும் நல்வாக்குக் கேட்கின்றார்; வெம்பி யிருக்கையில் வேறோர் திசைதன்னில் நாட்டில் தருமம் நலிந்ததென்று கண்கலங்கி நாட்ட வருகின்றார் நான்கு வகைத்தருமம்; தந்திரத்தால் நல்ல தருமத்தின் பேர்சொல்லி மந்திரங்கள் ஓதி வருபவரைக் காண்கின்றோம்; தாய்நாட்டுப் பற்றினிலும் தாய்மொழியின் அன்பினிலும் சேய்நாட்டுப் பற்றுமிகுஞ் சிந்தையரும் கேட்கின்றார்; ‘அன்று முடியரசர் ஆண்ட திருநாட்டை இன்று பெறுவோம் இனவழியில் ஒன்றாவோம்’ என்று முரசார்த் தியங்குகிற ஓரணியில் நின்றுபணி செய்வோரும் நேர்நின்று நம்மிடத்தே ‘உங்கள்நல் வாக்கை உவந்தே கொடுத்திடுக
*கண்டம் - உப்புக் கண்டம். |