பக்கம் எண் :

120கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

மூட்டிவிட்ட சினத்தீயில் யாகி யாகான்
      முகம்பொசுங்கி அகம்நசுங்கி இருளில் வீழ்ந்தான்
பூட்டுடைத்து வெளிவந்தார் வங்க மாந்தர்;
      பூத்துவிட்டான் புதுக்கதிரோன் கிழக்கு வானில்;
*கேட்டுமனங் கொண்டிருக்கும் பூட்டோ மட்டும்
      கிலிபிடித்துத் தோல்வியினால் புலம்பு கின்றான்;
நாட்டவரை ஏமாற்ற உளறு கின்றான்;
      நல்லறிவு பெற்றதுபோல் தோன்ற வில்லை.

புலம்பட்டும் நமக்கென்ன? புத்தி கெட்டுப்
      போர்முறையே விருப்பமெனில் வந்த பின்னர்க்
கலங்கட்டும் தனித்திருந்தே; அமைதி ஒன்றே
      காலமெலாம் விரும்புகிறோம்; அதைக்கெ டுத்துப்
புலங்கெட்ட பூட்டோவும் போர்தொ டுத்தால்
      பொன்றட்டும் நமக்கென்ன? நமது நாட்டில்
சிலம்பட்டும் போர்முரசு! மக்கள் வெள்ளம்
      திரளட்டும் ஒருமுகமாய்! ஒருகை பார்ப்போம்.


* கேட்டுமனம் - கெடுதலையுடைய மனம்