பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்125

சுட்டான் திருமுன்னர்த் தொண்டன் திருவுருவைச்
சுட்டார் புடமிட்டார் தூய உடலாக்கி
உட்புகுதச் செய்தார்; ஒருவிழியில் தீயுடையான்
அப்புறந்தன் ஏற்றான் அவனை எனவுரைப்பர்;
தீண்டாமை என்றதொரு தீய பழக்கத்தால்
ஆண்டான் அடிமைஎனும் ஆணவமுங் கொண்டதனால்
சேரிப் புறத்திற் சிறுகுடிலில் வந்தவனைப்
பேரில் உயர்ந்தோர் பெருந்தீங்கு செய்துவிட்டார்;
சீரங்கம் கொண்டானைச் சிந்தை நினைந்துருகிப்
பாரெங்கும் பாடிப் பரவிவரும் *பாணனவன்
ஊரின் ஒருபால் ஒதுங்கிக் கிடக்குமொரு
சேரி தருங்குடிசை செய்தவத்தால் வந்தமகன்
காவிரியின் ஓர்கரையில் கண்மூடிக் கொண்டங்கு
நாவிரிக்கும் பாடல் நலம்விரித்துப் பாடுங்காற்
பூசைக்குச் செல்கின்ற பூசுரர்கள் அப்பாடல்
ஓசை செவிபுகுத ஓர்பால் தனிநின்று,
செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர்கள் ஆனமையால்
வெந்தழல்போற் சீறி விரைந்தெறிந்தார் கல்லெடுத்து;
விட்டெறிந்த கல்லின் விரைவால் தலையுடைந்து
கொட்டுகிற செங்குருதி கூடியது காவிரியில்;
கண்டுநிகர் பாடல் கசிந்துருகிப் பாடியவன்
மண்டை உடைய மதிகலங்கக் காரணமென்?
தீண்டாமை யன்றோஅத் தீய பழக்கத்தைப்
பூண்டோடு தீயிற் பொசுக்கும்நாள் எந்நாளோ?
தாழுங் குமுகாயம் சாதிச் சழக்ககற்றி
வாழும்நாள் எந்நாள் வரும்?


* பாணன் - திருப்பாணாழ்வார்.