பக்கம் எண் :

126கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

12
நல்ல சமையமடா!

கலிவெண்பா

ஒன்றே குலமென்றும் ஒன்றே கடவுளென்றும்
நன்றே புரிந்து நலம்பெற்றோம் முன்னாளில்;
நீறுந் திருமண்ணும் நெற்றிதனில் நாமணிந்தோம்
சேரும் படியாகச் செய்தணிந்தோம் தொப்பிகளை;
நெஞ்சிற் சிலுவைதனை நேராகத் தொங்கவிட்டோம்
*மஞ்ஞைதருந் தோகை மதித்தெடுத்துக் கைப்பிடித்தோம்;
நீண்ட சடைமுடித்தோம்; நேருந் தலைமழித்தோம்;
வேண்டித் **துவர்தரித்தோம்; வேள்விக் கடன்முடித்தோம்
ஊரில்லை பேரில்லை ஒன்றும் வடிவில்லை
மாறில்லை ஓர்பிறப்பும் மாய்வும் உடையதிலை
என்றெல்லாங் கூறும் இறைவனுக்கு வைத்தபெயர்
ஒன்றிரண்டா ஓரா யிரமன்றோ! மேலுமுண்டு;
பாரில் பிறக்கவைத்தோம்; பாவந் துயர்கொடுத்தோம்;
தேரில் நிறுத்தித் திருமணங்கள் செய்துவைத்தோம்;
ஆட்டாத ஆட்டமெலாம் ஆண்டவனை ஆட்டிவைத்தோம்
பூட்டா மனக்கதவைப் பூட்டிவிட்டுப் பூசைசெய்தோம்;
இன்று பலவாகி எங்கும் வளர்சமையம்
நன்று புரியாமல் நாட்டில் எளியவரை
ஏய்த்துப் பிழைப்போர்க் கிடமாகிப் போனதலால்
பூத்தநலம் உண்டோ புகல்?


* மஞ்ஞை - மயில் **துவர் - காவியுடை