136 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
மெய்வண்ணம் அழகேறும் வண்ணம் வந்தாள்; மேலெண்ணம் யாதோஎன் றையங் கொண்டேன்; ஐவண்ணப் பட்டொன்று பார்த்தா ளென்ற அறிவிப்பின் வண்ணமெனப் பின்பு ணர்ந்தேன். ஒருநாள்நான் வாய்குமட்டி மயங்கி நின்றேன் உதவாத பித்தத்தின் அறிவிப் பென்றாள் இருநாளும் அருகிருந்தே இஞ்சிச் சாற்றை எலுமிச்சைச் சாற்றுடனே கலந்து தந்தாள்; மறுநாளவ் வேந்திழைவாய் குமட்டக் கண்டேன் மாதுனக்கும் பித்தத்தின் அறிவிப் பென்றேன்; தெரியாதோ இதுகூடப் போங்க ளத்தான் தெரிவையரைத் தாயாக்கும் அறிவிப் பென்றாள். மக்கள்மெய் தீண்டுதல்நம் உடலுக் கின்பம் மற்றவர்தம் மொழிகேட்டல் காதுக் கின்பம் இக்குறளின் பொருளினிக்குஞ் செய்தி சொன்னாய் ஏந்திழையே வாழியநீ; எனினும் ஒன்றை அக்கறையோ டுனக்குரைத்தல் கடமை யாகும்; அங்கேபார் சுவரெல்லாம் முக்கோ ணங்கள்! அக்குறிதான் நம்குடும்ப நலத்தைக் காக்கும் அறிவிப்பாம் அளவறிந்து பெறுதல் வேண்டும். பெறுவதற்குள் முக்கோண நினைவு வந்து பிதற்றுகிறேன் எனமூக்கில் விரலை வைத்தாய்! கருவயிற்றாய் முன்னுணர்ந்து நடவா விட்டால் கன்னத்தில் விரல்வைப்பாய் பின்னை நாளில்; திருமணத்தை நடத்திடுவோர், குடும்பப் பாங்கைத் தெரிந்துநலம் பெறவிழைவோர் நெற்றி மீது விரல்வைத்துச் சிந்திக்கும் பழக்கம் பெற்றால் விடிவுண்டு நாட்டுக்கும் நமக்கும் என்றேன். |