பக்கம் எண் :

138கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

18
இருண்ட வீடு

வரம்பெல்லாம் கதிர்வளைந்து முதிர்ந்தி ருக்கும்
      வயல்தந்த மணிகுவியும் களஞ்சி யங்கள்
வரம்பில்லாச் செல்வங்கள், தென்றல் வீசும்
      வளமனைகள், குறிப்புணர்ந்து பணிகள் செய்வோர்,
நிறங்குன்றாப் பொன்னணிகள் முதலா யாவும்
      நிறைந்ததொரு வாழ்வெனினும் பிள்ளை இன்றேல்
நரம்பில்லா யாழாகும்; உயிர்த்த லில்லா
      நன்மண்ணாற் புனைந்தஎழிற் பாவை யாகும்.

பளபளக்கும் வெண்ணிறத்துச் சுவர்கள், நான்கு
      பக்கத்தும் நின்றொளிரும் பளிங்குத் தூண்கள்,
வழுவழுப்புத் தரையின்மேல் வண்ணப் பூக்கள்
      வகைவகையாச் செய்திருக்கும் பளிங்குக் கற்கள்,
குளுகுளுத்த தென்றல்வரும் சாள ரங்கள்
      கொண்டிலங்கும் மாமனைதான்; எனினும் அங்கே
தழுதழுத்த மொழிபேசும் பிள்ளை ஒன்று
      தவழ்ந்திலதேல் மலரில்லாச் சோலை யாகும்.

பெற்றெடுத்த பிள்ளையினைத் தொட்டு ணர்ந்து
      பெறும்பயனைப் பெற்றிலதேல் என்ன கையோ?
சிற்றுருவப் பொற்சிலையைத் தூக்கித் தூக்கித்
      திளைத்தின்பம் அடையாத்தோள் என்ன தோளோ?