பக்கம் எண் :

146கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

22
நிலமகளா கொடியவன்?

நீதியொடு குடிமக்கள் நலம்நி னைக்கும்
      நெஞ்சுடையார் மூவேந்தர் ஆண்டி ருந்தார்;
ஆதியிலவ் வாட்சிக்கு நிகரே யில்லை;
      ஆயினுமப் பரம்பரையின் பெயரு ரைக்க
நாதியிலை; ஏனில்லை? நிலம டந்தை
      நலம்வேட்டுத் தமக்குள்ளே போர்தொ டுத்து
மோதியதால் அழிந்தொழிந்தார் அந்தோ! அந்த
      மூவரசை யழித்தவளைக் கொடியன் என்பேன்.

வடபுலத்து மன்னரையும் விட்டா ளல்லள்
      வாழ்விழந்த பாண்டவர்க்கும் நூற்று வர்க்கும்
கெடுமனத்தைப் பகையுளத்தைத் தந்து நின்றாள்
      கிளைஞருக்குள் பகைமூட்டி அழித்தொ ழித்தாள்;
அடுகுணத்துச் செஞ்சீனர் அண்டை நாடர்
      அகப்பகையாய் நமதுபனி மலையின் பாங்கர்
இடர்விளைக்க வழியமைக்கச் செய்த வள்யார்?
      இழிபழியை அவர்க்களித்தாள் அவளே யன்றோ?

உலகத்தை ஒருகுடைக்கீழ் ஆள எண்ணி
      ஒவ்வாத போர்வெறியர் உலகில் யாண்டும்
கலகத்தை விளைவித்துப் போர ரக்கன்
      கடுவாயில் போய்வீழ்ந்தார்; அவரை எல்லாம்
இலவுக்குக் காத்திருந்த கிளிபோ லாக்கி
      ஏலாத பேராசை உள்ளத் தூட்டி
நலமழித்த நிலமகளை எப்பேர் சொல்லி
      நானழைப்பேன்? மாபாவி என்ப தல்லால்.