பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்147

பாவமவள்! நிலமகளா குற்றஞ் செய்தாள்?
      பாராள வந்தவர்தாம் குற்றஞ் செய்தார்;
யாவுமவர் ஆசையினால் வந்த தீமை
      அதற்கவளா பொறுப்பாளி? இல்லை இல்லை;
காவலர்கள் *பிறர்க்குரியாள் தோள்வி ழைந்தார்
      கருத்தழிந்தார் உருத்தெழுந்தார் தானே மாண்டார்;
மேவுகின்ற ஆடவர்தாம் நல்ல ரானால்
      மெல்லியலாம் நிலமகளும் நல்லள் ஆவாள்.

நிலமகளின் ஆசையினாற் கொடிய மாந்தர்
      நெடுகிலுமே செய்தீமைக் களவே யில்லை;
பலவுயிரும் பலபொருளும் பிறப்ப திந்தப்
      பரந்துபடும் நிலத்திற்றான்; பின்னர் அந்தக்
குலமுழுதும் மறைந்தொடுங்கி மாய்வ தெல்லாம்
      கூறுமிந்த நிலத்திற்றான்; இதைம றந்து
நிலமுழுதும் தாமுண்ண முயலு கின்றார்
      நிலையாகத் தமதென்றும் எண்ணு கின்றார்,

பெரும்பொருளும் உயர்மனையும் வயலும் இன்னும்
      பேறனைத்தும் பெற்றாலும் இறுதிக் காலம்
வரும்பொழுது மனிதனுக்குச் சொந்த மென்று
      வாய்த்தநிலம் ஆறடிதான்; அதைம றந்து
வரும்மனிதன் வாழ்வெல்லாம் பிறர்நி லத்தை
      வளைப்பதற்கே முயல்கின்றான்; வளைத்த பின்னும்
அரும்புகிற ஆசையைத்தான் காட்டு கின்றான்
      ஆசைக்கோர் அளவில்லை அதனாற் போலும்.


* பிறர்க்குரியாள் - பிறர்க்குரியநிலமகள்