பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே15

மெல்லத்தன் உயிர்த்துடிப்பே அடங்கும் வண்ணம்
      மேனியிலே எரியூட்டிக் கொண்ட தோழர்
வெல்லத்தான் மொழிப்போரில் தமைக்கொ டுத்தார்
      வியப்புமிகும் அத்துடிப்பே இன்றும் வேண்டும்

துடிக்கட்டும் உமதுமனம்; தமிழ்மொ ழிக்குத்
      துளியேனும் பகைவருமேல் தூள்தூ ளாக
வெடிக்கட்டும் அப்பகைமை; தமிழர் நெஞ்சம்
      விழிக்கட்டும்; இந்திமொழி ஆதிக் கத்தை
முடிக்கட்டும் இன்றோடு; கூடி எங்கும்
      முழங்கட்டும் தமிழ்முழக்கம்; தமிழர் கைகள்
அடிக்கட்டும் போர்முரசு; பகைவர் கூட்டம்
      அலறட்டும் சிதறட்டும் அஞ்சி நின்றே.