152 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
பொற்புடைய மாதர் பொறுப்பென்ன? என்றெல்லாம் சொற்பொழிவு செய்தேன் சொலற்கரிய கைதட்டல்! அற்புதமே என்ன அமைந்துவிட்ட” தென்றுரைப்பாள் இப்படியும் நாட்டில் இயங்கும் குடும்பங்கள் பற்பலவும் இந்நாளில் பார்த்தல் எளிதாகும்; செல்வப் பெருக்காலுங் கல்விச் செருக்காலும் பல்வகைய நாகரிகப் பாங்குக்கும் ஆட்பட்டுச் சீரழிந்து போன சிலகுடும்பம் உள்ளதனை ஊரறியும் நாடறியும்; ஒவ்வாக் குடும்பமிது; மண்ணில் அடிவைக்க மாட்டாமல், உண்டவரை விண்ணில் மிதக்கவைக்கும் விந்தைக் குடிபழகி வந்தோன் குடும்பம், வருகின்ற நாளெல்லாம் நொந்தே அழியும்; நொடிப்பொழுதும் இன்பமிலை; கட்டிவந்த தன்மனையாள் கன்னம் முதுகெல்லாம் கொட்டிவரும் மத்தளந்தான் கொண்டவன் கைகளுக்குத் தற்கொண்டான் கொட்டுகிற தாளந் தவறாமல் இற்குரியாள் ஓவென் றிசைப்பாள் அவலப்பண்; பாழுங் குடியாற் பழுதுபடும் அக்குடும்பம் நாளும் இளிவரலால் நைந்துபடும்; அவ்வில்லில் வீரம் இருக்கும் வெகுளி உடனிருக்கும் நேரஞ் சிறிதானால் நீள்அழுகை தானிருக்கும் அச்சம் இருக்கும் அடுத்து நகையிருக்கும் மெச்சும் உவகையதும் மேவிக் கலந்திருக்கும் எண்சுவையுங் கூடி இயங்குமொரு நாடகத்தைப் பண்சுவையுஞ் சேர்த்துப் படைக்கும் மதுக்குடும்பம்; கல்லாக் குடும்பத்துங் கற்ற குடும்பத்தும் எல்லாக் குடும்பத்தும் இச்சிறுமை காண்பதுண்டு; |