156 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
நன்றுள்ள பொதுநலந்தான் மாந்தர் நெஞ்சில் நலம்பெற்று வளர்கிறதா என்று பார்த்தேன்; நின்றுள்ள நிலைகாணேன்; தன்ன லந்தான் நிலைபெற்றுக் கோலோச்சக் கண்டு நொந்தேன். வீதியிலே சமுதாயம் நிற்கக் கண்டேன் விலைபேசிப் பண்பாட்டை விற்கக் கண்டேன்; போதனையே செய்வாரைக் காணு கின்றேன் புகன்றபடி ஒழுகுபவர் எவருங் காணேன் ஏதினிமேல் நல்வாழ்வு? மாந்தர் நெஞ்சில் இருளகன்று சுடரொளிதோன் றாதோ? என்று வேதனையே கொள்கின்றேன் நிலையிற் கெட்ட விலங்கியல்பு மானிடரை நினையும் போது; போலிகளே சமுதாய வீதி தன்னில் பொன்னோடும் புகழோடும் உலவல் கண்டேன்; மாலையெலாம் அவர்பெறுவர் மதிப்பும் கொள்வர்; மாமேதை என்றெல்லாம் விருதும் கொள்வர்; மேலவரோ எள்ளலுற்றார். ஏசல் பெற்றார், மிதிபடுமோர் பொருளானார், தாழ்வே கண்டார்; *சாலியிலே பதருக்கு மதிப்பைக் கண்டேன் சாறறியா வெம்பலுக்கும் மதிப்பைக் கண்டேன் சீர்கெட்ட சமுதாய வீதி தன்னில் சிவப்புநிற விளக்குகளே ஒளிரக் கண்டேன் கூர்கெட்ட மாந்தருக்கு நெறியைக் காட்டிக் கூப்பிடுமோர் பச்சைநிற விளக்கைக் காணேன்; தேர்விட்ட நெடுந்தெருவில் மேடு பள்ளம் தெரியாமல் படர்கின்ற புதர்கள் கண்டேன்; வேர்கெட்ட எட்டிக்கு நீரை வார்த்தார் விழலுக்கே நீர்பாய்ச்சும் பேதை மாந்தர்.
* சாலி - நெற்பயிர் |